கோலாலம்பூர். நவ 2- நாடாளுமன்றத்தில் வாய்மொழி கேள்விகளுக்கு பதில் அளிப்பதற்கு அமைச்சர்கள் மற்றும் துணையமைச்சர்கள் அவையில் இருப்பதில்லை. மக்களின் பிரச்னைகளை தீர்ப்பதில் அமைச்சர்களும் துணையமைச்சர்களும் தீவிர கவனம் செலுத்துவதில்லை என்பதை இது காட்டுவதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் குற்றஞ்சாட்டினார். இன்றைய நாடாளுமன்ற கூட்டத்தில் பதில் சொல்ல வேண்டிய வெளியுறவு அமைச்சரும் அதன் துணையமைச்சரும் நாடாளுமன்ற கூட்டத்திற்கு வரவில்லை. இதனால் அந்த கேள்வியை சபாநாயகர் ஒத்திவைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதையும் அலோஸ்டார் பெரிக்காத்தான் நேசனல் நாடாளுமன்ற உறுப்பினரான அஃப்னான் ஹமிமி தைப் அஸாமுதீன் தெரிவித்தார்.
ஒரு அமைச்சரும் துணையமைச்சரும் வராவிட்டால் இதர அமைச்சை சேர்ந்த அமைச்சர் பதில் அளிக்க முடியும் என்பது நாடாளுமன்ற கூட்டத்தின் விதிமுறையில் இருக்கிறது. அப்படியிருந்தும் இன்றைய கூட்டத்தில் வெளியுறவு அமைச்சர் ஷம்ரி அப்துல் காதிரும், துணையமைச்சர் முகமட் அலாமினும் நாடாளுமன்ற கூட்டத்தில் இல்லை. வெளிறவு அமைச்சு தொடர்பாக பதில் அளிப்பதற்கு இதர அமைச்சர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை . நாடாளுமன்றத்தில் என்னதான் நடக்கிறது. முறையான ஏற்பாடுகள் இல்லை. அமைச்சரவை மற்றும் துணையமைச்சர்களின் நடவடிக்கையை பிரதமர் கண்காணிக்கவில்லை. பிரதமர் மீது அமைச்சர்கள் மற்றும் துணையமைச்சர்களுக்கு பயமே இல்லையா? என்றும் அஃப்னான் ஹமிமி வினவினார்.