
டுங்குன், செப்-11-திரங்கானு, டுங்குனில் கல்வி மையமொன்றின் விடுதியின் லாக்கரில் ஆண் குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அச்சம்பவம் தொடர்பில் நேற்றிரவு 10.48 மணியளவில் காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது.
19 வயதுடைய மாணவி ஒருவர் கடந்த புதன்கிழமை இரவு விடுதிக் கழிவறையில் சுமார் எட்டு மாத வளர்ச்சியடைந்த நிலையில் இருந்த ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக டுங்குன் மாவட்ட காவல் துறைத் தலைவர் Nik Ab Halim Nik Mat தெரிவித்தார்.
குழந்தை பிறந்த பின்னர் உயிரிழந்த நிலையில் இருந்ததாகவும், அம்மாணவி அதனைத் துணியால் சுற்றிப் பையில் வைத்து லாக்கரில் மறைத்து வைத்ததாகவும் நம்பப்படுகிறது. குழந்தையின் இறுதிச் சடங்குகளுக்கு உதவி கோரி அம்மாணவி மசூதி நிர்வாகமொன்றை அணுகியதைத் தொடர்ந்து அச்சம்பவம் அம்பலமானது.
குழந்தையின் இறப்புக்கான காரணத்தை கண்டறிய அதன் சடலம் டுங்குன் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதோடு மாணவியின் காதலனையும் காவல்துறை தேடி வருகிறது. பிறப்பை மறைத்த குற்றத்திற்காக குற்றவியல் சட்டம் பிரிவு 318-ன் கீழ் விசாரணை நடைபெறுகிறது.



