பிரங்பார்ட் , டிச 31 – பிரான்ஸில் ஆல்ப் மலைப்பகுதியில் 2013ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நிகழ்ந்த விபத்தில் சிக்கிய பின் பிரபல பார்மூலா ஒன் கார் பந்தய வீரரான ஜெர்மனியியைச் சேர்ந்த மைக்கேல் ஷூமேக்கர் உடல் நலம் தேறி வருவாரா எனும் கேள்வியும் எதிர்ப்பார்ப்பும் அவரின் ரசிகர்கள் மத்தியில் இன்னும் நிலவுகின்றன.
அவர் நன்றாக இல்லையயென அவரது நெருங்கிய நண்பரும் முன்னாள் பார்மூலா ஒன் கார் பந்தய வீரருமான செபஸ்டியன் வெட்டல் தெரிவித்திருக்கிறார். இருப்பினும் அவரை எப்படியாவது தேற்றி விட வேண்டும் எனும் நோக்கில் 24 மணிநேரமும் 15 பேர் அடங்கிய மருத்துவ குழு போராடி வருகிறது.
கடந்த டிசம்பர் 29ஆம் தேதியோடு அவர் விபத்தில் சிக்கி 10 ஆண்டுகள் நிறைவடைந்தன. பனிச்சறுக்கு விளையாட்டின் போது ஏற்பட்ட விபரீத விபத்திற்குப் பின் அவர் 2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம்வரை மருத்துவ ரீதியாக “coma” எனும் சுயநினைவற்ற மயக்க நிலையில் வைக்கப்பட்டிருந்தார். அவருக்கு பல அறுவை சிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட்டன.
அவருடைய உடல் நலத்தின் உண்மை நிலவரம் இன்னும் பகிரங்கமாக அறிவிக்கப்படாத நிலையில் அவரின் மூளை செயல்பாட்டை உந்தச் செய்ய அவர் மெர்சிடிஸ் பென்ஸ் AMG காரில் அமர்த்தப்பட்டு, உலா கொண்டு சென்று, என்ஜின் சத்தத்தை கேட்க வைக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பந்தய சமயங்களில் அக்காரை ஓட்டிய அவர் அச்சத்தத்தை கேட்கும் போது அவரின் மூளை செயல்பாடு திரும்புவதற்கான வாய்ப்பு இருக்கும் என நம்பப்படுகிறது.
உலகின் தலைச்சிறந்த ஃபார்முலா 1 பந்தயக் கார் ஓட்டுனரான அவர் உடல் நலம் தேறி வர வேண்டும் என பலரும் தொடர்ந்து எதிர்ப்பார்த்துக் காத்திருக்கின்றனர்.