![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/06/MixCollage-24-Jun-2024-01-24-PM-4541.jpg)
கோலாலம்பூர், ஜூன்-24 – விமானப் பயணங்களுக்கு அதிகரித்து வரும் வரவேற்பால், விமானக் கட்டணங்கள் இந்த இடைப்பட்ட காலத்தில் குறைய வாய்ப்பில்லை.
குறிப்பாக கோவிட் பெருந்தொற்றுக்கு முந்தையைக் கட்டண விகிதத்திற்குத் திரும்பும் சாத்தியம் மிக மிகக் குறைவே என, Air Asia குழுமத்தின் புதியத் தலைவர் போ லிங்கம் (Bo Lingam) கூறினார்.
விமான எரிபொருள் விலை சரிவு மற்றும் Air Asia விமானக் கொள்ளளவு அதிகரிப்பால் அடுத்தாண்டு கொஞ்சம் விலைக் குறைப்பை பயணிகள் எதிர்பார்க்கலாம்.
ஆனால், கோவிட் காலத்திற்கு முந்தையைக் கட்டண விகிதத்திற்குத் திரும்பும் சாத்தியம் இல்லை என, ஆசியாவின் அந்த மிகப் பெரும் மலிவுக் கட்டண விமான நிறுவனத்தின் CEO கூறினார்.
கோவிட் பெருந்தொற்றின் போது உலகளவில் முடங்கிப் போயிருந்த விமானப் போக்குவரத்து, கோவிட்டுக்குப் பிறகு புத்துயிர் பெற்று, பரபரப்புடன் செயல்பட்டு வருகிறது.
இதனால், உலகின் பல பகுதிகளில் பணவீக்க விகிதத்தைக் காட்டிலும் விமானப் பயண டிக்கெட்டுகளின் விலை எகிறுவதை அவர் சுட்டிக் காட்டினார்.
அதே சமயம், புதிய விமானங்களைத் தருவிப்பதில் ஏற்படும் தாமதம், எதிர்பாரா இயந்திரப் பராமரிப்புப் பணிகள் உள்ளிட்ட காரணங்களால், போதுமான அளவுக்கு விமானங்களை இயக்க முடியாமல் விமான நிறுவனங்கள் திணறி வரும் பிரச்னையும் இருக்கவே செய்வதாக போ லிங்கம் சொன்னார்.