புது டெல்லி, மார்ச் 18 – விருந்தின் போது பொழுதுப் போக்கு மருந்தாக பாம்பு விஷத்தைப் பயன்படுத்திய சந்தேகத்தில், இந்தியாவின் பிரபல You Tuber-ரும் Bigg Boss OTT வெற்றியாளருமான எல்விஷ் யாதவ் கைதாகியுள்ளார்.
விசாரணைகளுக்கு உதவும் வகையில் அவரை 14 நாட்கள் தடுத்து வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக் கிழமை கைதான யாதவ் மற்றும் இதர ஐவர் மீது வன விலங்குப் பாதுகாப்புச் சட்டம் மற்றும் குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவுச் செய்யப்பட்டுள்ளன.
கடந்தாண்டு நவம்பரில் உத்தர பிரதேசத்தில் விருந்து மண்டபமொன்றில் வைத்து ஐவர் கைதாகினர்; அவர்களிடம் இருந்து 5 நாகப்பாம்புகள் உட்பட 9 பாம்புகள் பறிமுதல் செய்யப்பட்டன.
அதோடு சந்தேகத்திற்குரிய 20 மில்லி பாம்பு விஷமும் கைப்பற்றப்பட்டது.
எனினும் அப்போது யாதவ் விருந்து மண்டபத்தில் இல்லை; இருந்தாலும் அந்த பாம்புகளை தனது வீடியோ படப்பிடிப்புக்கு யாதவ் பயன்படுத்தியிருப்பது தெரிய வந்தது.
அவரின் You Tube Channel-களிலும் பாம்புகளுடன் அவர் இருக்கும் வீடியோக்கள் நிறைய உள்ளன.
யாதவ், பாம்பு விஷத்தை சட்டவிரோதமாக விற்பனை செய்வதாக இந்தியாவின் பிரபல விலங்கு நல ஆர்வலர் மேனகா காந்தி பகிரங்கமாகக் குற்றம் சாட்டி, யாதவ் கைதுச் செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தமக்கெதிரான குற்றச்சாட்டுகளை 26 வயது யாதவ் மறுத்து வந்த நிலையில், பாம்பு விஷத்தைப் பொழுதுப் போக்கு போதைப் பொருளாக பயன்படுத்திய வழக்கில் யாதவின் பங்கு குறித்து விசாரிக்கப்படுவதற்காக அவர் தற்போது கைதாகியுள்ளார்.