கோலாலம்பூர், நவ 9 – விளம்பரத்திற்காக 500 மில்லியன் ரிங்கிட்டை தாம் செலவிட்டுள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறியிருப்பது தீய நோக்கத்தைக் கொண்ட பொய்யென முஹிடின் யாசின் தெரிவித்திருக்கிறார். தமது தலைமையிலான இதற்கு முந்தைய நிர்வாகம் அரசாங்கத்தை அறிமுகப்படுத்துவதற்காக கோவிட் -19 நடவடிக்கைகள் உட்பட 500 மில்லியன் ரிங்கிட் செலவிட்டிருப்பதாக அன்வார் தெரிவித்த குற்றச்சாட்டு பெரிக்காத்தான் நேசனல் தோற்றத்திற்கு களங்கத்தை ஏற்படுத்தும் முயற்சியென முஹிடின் கூறியுள்ளார். இந்த குற்றச்சாட்டு முழு பொய்யாகும் என பெரிக்காத்தான் நேசனல் கூட்டணியின் தலைவருமான முஹிடின் தெரிவித்தார்.
சபா, சரவா விவகாரங்கள் மற்றும் சிறப்பு பணிகளுக்கான அமைச்சர் அர்மிசான் முகமட் அலி நாடாளுமன்றத்தில் இவ்வாண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி தெரிவித்த எழுத்துப் பூர்வமான பதிலில் பெரிக்காத்தான் நேசனல் அரசாங்கம் தனது விளம்பரத்திற்காக 181,752 ரிங்கிட் 20 சென் மட்டுமே செலவிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அப்படியிருக்கும்போது தமது தலைமையிலான அரசாங்கம் 500 மில்லியன் ரிங்கிட் செலவிட்டுள்ளதாக அன்வார் கூறியிருப்பது முழுப் பொய்யாகும் என முஹிடின் தெரிவித்தார். அதே வேளையில் அன்வார் தலைமையிலான மடானி அரசாங்கம் அறிமுகத்திற்காக ஒரு ஆண்டுக்குள் 489,216 ரிங்கிட்டை செலவிட்டிருப்பதாக பாகோ நாடாளுமன்ற உறுப்பினருமான முஹிடின் கூறினார். கோவிட் -19 தொற்றின்போது தமது தலைமையிலான அரசாங்கம் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அர்மிசானின் பதிலில் குறிப்பிடப்படவில்லை என்றும் முஹிடின் சுட்டிக்காட்டினார்.