![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/02/MixCollage-20-Feb-2024-10-22-AM-9114.jpg)
ஈப்போ, பிப் 20 -இம்மாதம் 22 ஆம் தேதி பினாங்கு அறிவியல் பல்கலைக் கழகத்தில் கணக்கியல் துறையில் தேர்வு எழுதவிருந்த 22 வயது மாணவி கீர்த்திகா சத்தியகுமார் விஷக் குளவி கொட்டி மரணம் அடைந்தார். புந்தோங்கில், ஹார்மோனி அடுக்குமாடி குடியிருப்பில் இந்த துயரச் சம்பம் நிகழ்ந்தது. சனிக்கிழமையன்று இரவு 8.30 மணியளவில் இரவு உணவை உட்கொண்ட பிறகு வீட்டின் பிரதான அறையில் கீர்த்திகா ஓய்வு எடுத்துக் கொண்டு இருந்தார். அப்போது அங்குள்ள மின் விசிரியால் தாக்கப்பட்டு கீழே விழுந்த குளவி அவரது இடது காலின் சுண்டு விரலில் கொட்டியுள்ளது.
கீர்த்திகா வலியால் துடித்துக்கொண்டிருந்ததைக் கண்டு அவரது சுண்டு விரலில் சிக்கிய கொடுக்கை மீட்டு அந்த இடத்தில் சுண்ணாம்பை தடவியபோதிலும் அடுத்த சில நிமிடங்களில் தீடிரென கீர்த்திகா மயங்கி விழுந்ததைத் தொடர்ந்து உடனடியாக அவரை தனியார் கிளினிக்கிற்கு கொண்டுச் சென்றதாக அவரது தாயார் அமுதா தெரிவித்தார். பின்னர் அங்கிருந்து அரசாங்க மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றும் சிகிச்சை பலனளிக்காததால் அவர் இறந்ததாக கூறப்பட்டது. நேற்று நடைபெற்ற இறுதிச் சடங்கிற்குப் பின் கீர்த்திகாவின் உடல் புந்தோங் மின் சுடலையில் தகனம் செய்யப்பட்டது.
தொழிற்நுட்பக் கல்லூரியில் கல்வியை முடித்த அவர் மேற்கல்வியை கணக்கியல் துறையில் இணையம் வழி தொடர்ந்துள்ளார். இது தொடர்பாக பினாங்கு அறிவியல் பல்கலைக் கழகத்தில் இம்மாதம் 22 ஆம் தேதி தேர்வு எழுத செல்லவிருந்த தகவலை அவரது தந்தை எஸ். சத்தியகுமார் வேதனையோடு தெரிவித்தார். மூன்று பிள்ளைகள் கொண்ட குடும்பத்தில் கீர்த்திகா இரண்டாது பிள்ளையாவார். அவரது திடீர் மரணம் தமது குடும்பத்தில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியள்ளதாக சத்தியகுமார் கூறினார்.