சுங்கை சிப்புட், டிசம்பர் 21- இன்றைய காய்கறி விலையேற்றத்தினால் குறைந்த வருமானம் பெறுவோர் கவலை அடைய வேண்டியதில்லை. நம் வீட்டை சுற்றி சிறிய நிலமானாலும், நம்முடைய அன்றாட தேவைக்கான காய்கறிகளை நாமே சொந்தமாகப் பயிரிட்டு பொருளாதாரப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும். ரசாயனம் இல்லாத காய்கறிகளை பயிரிடுவது எப்படி? அதற்கு தேவையான அனுபவப் பயிற்சியை வேலையின்றி இருக்கும் இளைஞர்களுக்கும், தனித்து வாழும் தாய்மார்களுக்கும் சுங்கை சிப்புட் மக்கள் சேவை மையத்தின் ஏற்பாட்டில் இந்த விவசாயப் பயிற்சி நடத்தப்பட்டதாக அத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் கேசவன் சுப்ரமணியம் தெரித்தார். காய்கறி விவசாயத்தில் நல்ல அனுபவமிக்க விவசாயியான கேசவன் பாலசுப்ரமணியம் “இரண்டு நாட்கள் வழங்கிய பயிற்சியில் விவசாயம் செய்வது எப்படி?” என்னும் பயிற்சியை நன்முறையில் அளித்துள்ளார்.
நமது உணவுக்குத் தினசரி தேவைப்படும் காய்கறிகளை, குறிப்பாக பயிற்றங்காய், பாகற்காய், கத்திரிக்காய், வெள்ளரிக்காய், அவரைக்காய், பச்சைமிளகாய், கீரைவகைகள் மற்றும் பப்பாளி, கொய்யா மற்றும் எலுமிச்சம் போன்று பழங்களையும் பயிரிட்டு நம் தேவையை நாமே பூர்த்தி செய்துக் கொள்ளமுடியும் என்பதற்கு இந்த விவசாயப் பயிற்சியில் கலந்துக் கொண்டோர் பயன் அடைந்திருப்பார்கள் என தாம் நம்புவதாக கேசவன் கூறினார்.
இந்த விவசாயப் பயிற்சி முதல் முறையாக நடைபெற்றுள்ளது. இதில் கலந்துக் கொண்ட அனைவருக்கும், காய்கறி பயிரிடுவதற்கு தேவையான உபகரணப் பொருள்கள் அனைத்தும் மக்கள் சேவை மையத்தின் சார்பில் வழங்கப்பட்டதாக கேசவன் தெரிவித்தார்.