கோலாலம்பூர், மார்ச் 9 – மலேசியத் தமிழ் காப்பகமும் தமிழ்ப் பேராயமும் இணைந்து சிறந்த தமிழ் நூலுக்கான ‘பெருந்தமிழ்’ விருதை, பத்மபூஷன் கவிப்பேரரசு வைரமுத்துவின் மகா கவிதை நூலுக்கு வழங்கியது.
நேற்று வெள்ளிக்கிழமை கோலாலம்பூர் புத்ரா உலக வாணிப மண்டபத்தில் இந்த பெருந்தமிழ் விருது விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.
‘கிட்டத்தட்ட 52 ஆண்டுகள் தமிழ் துறையில் ஈடுப்பட்டு அதில் வெற்றி கண்டவர் கவிப்பேரரசு வைரமுத்து’ என்று நிகழ்ச்சியில் தொடக்கவுரை வழங்கிய மஇகா துணைத் தலைவரும் நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளருமான டத்தோ ஸ்ரீ எம். சரவணன் புகழாரம் சுட்டினார்.
இவ்விருது விழா வைரமுத்துவுகாக நடத்தப்பட்டாலும் அவர் எழுதிய மகா கவிதை என்ற நூலுக்கு குறிப்பாக தமிழுக்கு நடத்தப்பட்ட மாபெரும் விழா என்று டத்தோ சரவணன் சுட்டிக்காட்டினார்.
மலேசியப் பல்கலைக்கழகத்தின் கல்வியாளர்கள் மற்றும் திறன் ஆய்வாளர்கள் என 12 பேர் இணைந்த மதியுரைஞர் குழு ஆய்வுக்கு பின் இந்த விருதை கவிப்பேரரசுக்கு வழங்க முடிவு செய்துள்ளனர் என்றார். நிலம், நீர், தீ, வளி, வெளி என்ற ஐம்பூதங்களின் சிறப்பு குறித்து விஞ்ஞான ரீதியில் எழுதப்பட்ட பெரும் கவிதை நூலான மகா கவிதை, வைரமுத்துவின் 31 ஆது படைப்பாகும்.
அவ்வகையில், ஐம்பூதங்களை உள்ளடக்கிய, ஐந்து நெடுங்கவிதைகளின் பெருந்தொகுப்புகளை ஒவ்வொன்றாக 5 திறன் ஆய்வாளர்கள் இந்நிகழ்ச்சியில் படைத்தனர்.
அதனை தொடர்ந்து, மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தலைமையுரை வழங்கினார். ‘கவிப்பேரரசு வைரமுத்து தமிழுக்கு ஆற்றிய சேவையை மஇகா தொடர்ந்து அங்கீகரிக்கும். இதன் அடிப்படையில் எம்ஐஇடியின் தமிழ்ப்பள்ளிகளுக்கான திட்டங்கள் கவிப்பேரரசு வைரமுத்துவின் பெயரில் முன்னெடுக்கப்படும்’ என்று கூறினார்.
தமிழுக்கும் தமிழர்களுக்கும் தன் எண்ணற்ற எழுத்தோவியப் படைப்புகளால் பெருமை சேர்த்த கவிஞர் வைரமுத்துவிற்கு 12 ஆய்வாளர்கள் முன்னிலையில் பெருந்தமிழ் விருதுடன் RM 1 லட்சயமும் வழங்கி கெளரவிக்கப்பட்டது.
‘தமிழுக்கு மகுடம் சூடி அழகு பார்க்கும்
மலேசியத் தமிழர்களுக்கு எனது நன்றி’ என்று கவிப்பேரரசு வைரமுத்து நெகிழ்ச்சியுடன் தனது ஏற்புரையை நிகழ்ச்சியில் வழங்கினார்.
மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன், மஇகா தேசியத் துணைத் தலைவரும் சொல்வேந்தருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன், விழாவின் நாயகன் பத்மபூஷன் கவிப்பேரரசு வைரமுத்து, மதியுரைஞர்கள், மஇகா உறுப்பினர்கள் என ஏறக்குறைய 1000க்கும் மேற்பட்டோர் முன்னிலையில் நிகழ்ச்சி பிரமாண்டமாக நடைபெற்றது. இவ்விருது விழா வைரமுத்துவின் பாடல்கள் மற்றும் விருது உபசரிப்புடன் நிறைவடைந்தது.