ஷா ஆலாம், ஜனவரி 15 – சிலாங்கூர், ஷா ஆலாம் அரங்கை தகர்க்க, வெடிமருந்துகள் அல்லது வெடிகுண்டுகள் எதுவும் பயன்படுத்தப்படாது.
புதிய KSSA ஷா ஆலாம் அரங்கின் நிர்மாணிப்பு பணிகளுக்காக அந்த பழைய அரங்கை இடிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
எனினும், தெனாகா நேஷனல் நிறுவனத்தின் துணை நிலையத்தை இடமாற்றம் செய்த பின்னர், ஷா ஆலாம் பழைய அரங்கை இடிக்கும் நடைமுறை கைமுறையாக மேற்கொள்ளப்படுமென, சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.
பழைய அரங்கை இடிக்கும் பணிகள் விரைந்து மேற்கொள்ளப்படுவதும், அது சுற்று வட்டார மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிக்காமல் இருப்பதும் உறுதிச் செய்யப்படுமென, அமிருடின் சொன்னார்.
அங்குள்ள TNB துணை நிலையம், செக்ஷன் 13 சுற்று வட்டாரப் பகுதிகளுக்கு மின்சாரத்தை விநியோகிக்கும் முக்கிய நிலையமாகும். எனவே, அதனை பாதுகாப்பாக அகற்றிய பின்னரே, ஷா ஆலாம் பழைய அரங்கை இடிக்கும் பணிகள், இயந்திரங்களை கொண்டு தொடங்கப்படும் எனவும் அமிருடின் தெளிவுப்படுத்தினார்.
புதிய ஷா ஆலாம் அரங்கின் கட்டுமானப் பணிகள் 2026-ஆம் ஆண்டு நிறைவடையுமென எதிர்பார்க்கப்படுகிறது.