கோலாலம்பூர், மார்ச் 14 – இஸ்ரேல் – அமெரிக்க நெருக்கடியினால் ஏற்பட்டுள்ள அமெரிக்க தொடர்பைக் கொண்ட தயாரிப்பு பொருட்களை புறக்கணிக்கும் நடவடிக்கை மலேசிய தொழிலாளர்களையும் வர்த்தகத்தையும் பெரிதும் பாதிக்கும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்த புறக்கணிக்கும் போக்கினால் தற்போது ஸ்டார்பர்க் மலேசியா வர்த்தக நிலையங்களில் பயனீட்டாளர்கள் குறைந்துள்ளனர். வர்த்தகத்தில் இதுபோன்ற புறக்கணிப்பினால் பலர் வேலை இழக்கக்கூடும் என்பதோடு வர்த்தக அளவும் குறையும் என்பதால் உள்நாட்டு தொழிலாளர்களையும் அந்த நிறுவனத்தின் சந்தையையும் பெரிய அளவில் பாதிக்கும் என மலேசிய மனித வள கருத்தரங்கின் தலைமை செயல் அதிகாரி அருள்குமார் சிங்காரவேலு தெரிவித்தார்.
இந்த நிலை நீடித்தால் நாட்டில் வேலையில்லாத விகிதம் அதிகரிக்கும் மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களும் அவர்களது விநியோகிப்பாளர்களும் ஆட்குறைப்பு செய்யக்கூடிய சூழ்நிலை ஏற்படலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஸ்டார்பர்க் மலேசியாவை புறக்கணிப்பதை மலேசியர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டுமென பெர்ஜெயா Corp தோற்றுவிப்பாளரான வின்சென்ட் டான் அண்மையில் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஸ்டார்பர்க் மலேசியா தொழிலாளர்களில் 85 விழுக்காட்டினர் மலேசியர்கள் மற்றும் அந்த நிறுவனத்தின் தலைமையக அலுவலகத்தில் வெளிநாட்டினர் எவரும் வேலை செய்யவில்லை என்றும் அந்த தொழில் அதிபர் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் – பாலஸ்தீன நெருக்கடியினால் தற்போது ஸ்டார்பர்க் மலேசியாவில் பானங்கள் உட்பட அதன் விற்பனை பெரிய அளவில் பாதித்துள்ளன.
பெர்ஜெயா உணவு நிறுவனத்தின் 90 விழுக்காடு வருமானம் ஸ்டார்பர்க் மலேசியாவை நம்பி இருப்பதாக வின்சென்ட் டான் தெரிவித்தார்.