கோலாலம்பூர், ஜூன்-15 – திங்கட்கிழமை கொண்டாடப்படவிருக்கும் ஹஜ் பெருநாளை ஒட்டிய வாரக் கடைசி விடுமுறையில், நாட்டின் முக்கிய நெடுஞ்சாலைகளில் 25 லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் பயணிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெள்ளிக்கிழமை அதிகரிக்கத் தொடங்கிய வாகனங்களின் எண்ணிக்கை வரும் செவ்வாய்க்கிழமை வரை நீடிக்கும் என மலேசிய நெடுஞ்சாலை வாரியம் LLM கூறியது.
அதில் PLUS நெடுஞ்சாலையை மட்டும் 22 லட்சம் வாகனங்கள் பயன்படுத்தலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
கோலாலம்பூர் – காராக் நெடுஞ்சாலையை 1 லட்சத்து 81 ஆயிரம் வாகனங்களும், 2 கிழக்குக் கரை நெடுஞ்சாலைகளையும் மொத்தமாக 1 லட்சத்து 40 ஆயிரம் வாகனங்களும் பயன்படுத்தக் கூடும்.
இந்த லட்சக்கணக்கானோரின் பயணங்கள் சுமூகமாக இருப்பதை உறுதிச் செய்வதற்குண்டான முன்னேற்பாடுகளைச் செய்யுமாறு, நெடுஞ்சாலைப் பராமரிப்பு நிறுவனங்கள் உத்தரவிடப்பட்டுள்ளன.
தேவையான இடங்களில் Smart Lane பாதைகள் திறக்கப்படுவது, டோல் சாவடிகளில் சாலைக் கட்டண வசூலிப்பில் இடையூறு வராமல் பார்த்துக் கொள்வது, அதிக வாகனங்கள் இருக்கும் பகுதிகளில் கூடுதல் டோல் பாதைகளைத் திறப்பதும் அவற்றில் அடங்கும் என LLM கூறியிருக்கிறது.