ஈப்போ, டிசம்பர் 20 – பேராக், தொங்காங் பூர்வக்குடி கிராமத்திலிருந்து, உலு கிந்தா இராணுவ முகாம் அமைந்திருக்கும் பகுதியில், சுற்றி திரிந்ததாக கூறப்படும் புலி ஒன்று, இன்று காலை பிடிபட்டது.
பொறி வைக்கப்பட்டிருந்த இடத்தை நெருங்கி வந்த அந்த ஆண் புலியை, தமது தரப்பு மயக்க மருத்தை கொண்டு சுட்டு வீழ்த்தி பின்னர் பிடித்ததாக, பேராக் மாநில PERHILITAN – தேசிய பூங்கா வனவிலங்கு பாதுகாப்பு துறை இயக்குனர் யூசோப் சாரிப் தெரிவித்தார்.
90 கிலோகிராம் எடை கொண்ட, நான்கு வயது மதிக்கத்த அந்த புலி குறித்து நேற்றிரவு மணி 11.30 வாக்கில் புகார் கிடைத்ததையும் அவர் உறுதிப்படுத்தினார்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், அதிகாலை மணி 4.30 வாக்கில் அதனை வெற்றிகரமாக பிடித்தனர்.
இதற்கு முன் சமூக ஊடகங்களில் வைரலான புலியும், தற்சமயம் பிடிபட்ட புலியும் ஒன்று தான் என நம்பப்படுகிறது.
எனினும், அதே பகுதியில் ஐந்து புலிகளின் நடமாட்டம் இருப்பதாக கூறப்படுவதை, யூசோப் மறுத்தார்.