புத்ராஜெயா, பிப்ரவரி 16 – ஒரு லட்சத்து 70 ஆயிரம் ரிங்கிட் ரொக்கப் பணத்தைக் கடத்திச் செல்ல சீன நாட்டவர் மேற்கொண்ட முயற்சியை அரச மலேசிய சுங்கத் துறை, KLIA-வில் முறியடித்திருக்கிறது.
ஜனவரி 27-ஆம் தேதி நிகழ்ந்த அச்சம்பவத்தின் போது, தாய்லாந்தின் சுவர்ணபூமி அனைத்துலக விமான நிலையத்திற்குப் பயணமாகவிருந்த அந்த சீன பிரஜை, KLIA புறப்பாடு மையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.
அவரின் கைப்பையை ஸ்கேன் செய்ததில், அதனுள் ஏராளமான ரொக்கப் பணம் இருக்கலாம் என சுங்கத் துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் வந்திருக்கிறது.
மேற்கொண்டு சோதனைச் செய்து பார்த்ததில், அப்பையினுள் ஆயிரத்து எழுநூறு 100 ரிங்கிட் நோட்டுகள் கைப்பற்றப்பட்டன; அதன் மதிப்பு 1 லட்சத்துத்து 70 ஆயிரம் ரிங்கிட் என கணிக்கப்பட்டதாக சுங்கத் துறை அமலாக்கப் பிரிவின் மத்திய மண்டல இயக்குநர் வோங் புன் சியான் தெரிவித்தார்.
விசாரித்ததில், தாம் எடுத்துச் செல்லும் ரொக்கத்தை கட்டாயம் அறிவிக்க வேண்டிய சுங்கத் துறையின் பாரம் 7-ழை அவர் பூர்த்திச் செய்யவில்லை. அதோடு பேங்க் நெகாராவின் அனுமதி பெர்மிட்டும் அவரிடம் இல்லாததால் பணக் கடத்தல் பேரில் அவர் கைதுச் செய்யப்பட்டார்.
KLIA புறப்பாடு மையத்தின் வழியாக மலேசிய ரிங்கிட் நோட்டுகள் அனைத்துலப் பயணியால் கடத்தப்படுவதே இதுவே முதன் முறை என போ சியான் குறிப்பிட்டார்.
தொகையை முறையாக அறிவிக்காமல், அதிகாரிகளின் கண்ணில் மண்ணைத் தூவி விட்டு, கையில் எடுத்துச் செல்லும் பையில் பண நோட்டுகளைக் கடத்துவதை அந்நபர் பழக்கமாக வைத்துள்ளார்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு அதிகபட்சமாக 30 லட்சம் ரிங்கிட் அபராதமும், ஐந்தாண்டுகளுக்கும் மேற்போகாத சிறைத் தண்டனையும் விதிக்கப்படலாம்.