புத்ரா ஜெயா , ஜன 19 – 30 திருக்குர்ஆன் ஆடியோ வாசகங்களை கொண்ட 1.1 மில்லியன் ரிங்கிட் மதிப்புடைய 3,254 இலக்கவியல் சுவர் கடிகாரங்களை உள்துறை அமைச்சு பறிமுதல் செய்தது. கடந்த மாதம் கிள்ளான் பள்ளத்தாக்கில் நான்கு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அந்த சுவர்க்கடிகாரங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக உள்துறை அமைச்சின் அமலாக்க மற்றும் கட்டுப்பாட்டு பிரிவின் செயலாளர் நிக் யூசைமி யூசோஃப் தெரிவித்தார். அந்த நடவடிக்கையின்போது 30 முதல் 40 வயதுடைய நான்கு ஆடவர்கள் கைது செய்யப்பட்டனர்.
சுவரில் மாட்டக்கூடிய அந்த இலக்கவியல் கடிகாரத்தில் இடம்பெற்றிருந்த திருக்குர்ஆன் வாசகங்களின் ஆடியோ வாசிப்பில் தொழிற்நுட்ப கோளாறு இருந்தது கண்டுப்பிடிக்கப்பட்டதாக நிக் யூசைமி கூறினார். சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட அந்த சுவர்க்கடிகாரங்கள் மின்வர்த்தகம் மூலம் சமுக வலைத்தளம் வாயிலாக விற்கப்படுவதாகவும் ஒரு கடிகாரத்தின் விலை 350 ரிங்கிட் என்றும் அவர் தெரிவித்தார்.