கோலாலம்பூர், ஜன 16 – 2024 – 2025 ஆம் ஆண்டுக்கான 12 ஊராட்சி மன்றங்களுக்கு உறுப்பினர்களை நியமிப்பதில் சிலாங்கூர் மாநில அரசாங்கத்திற்கும் அம்னோவுக்குமிடையிலான நெருக்கடிக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை. 272 புதிய நகராண்மைக்கழக உறுப்பினர்கள் நியமிக்கும் விவகாரத்தில் சிலாங்கூர் மந்திரிபுசார் அமிருதீன் ஷாரி வழங்க முன்வந்துள்ள வாய்ப்புகளை அம்னோ ஏற்றுக்கொள்வதற்கு இன்னும் தயாராகவில்லையென அக்கட்சிக்கு நெருக்கமான வட்டாரம் தெரிவித்துள்ளது.
பக்காத்தான் ஹராப்பானிலுள்ள அனைத்து உறுப்பு கட்சிகளும் நகராண்மை கழக உறுப்பினர்களுக்கான பெயர்களை டிசம்பர் மாத இறுதிக்குள் சமர்ப்பித்துவிட்டன. புத்தாண்டு பிறந்து 15 நாட்களாகிவிட்ட போதிலும் சிலாங்கூரில் நகராண்மைக் கழக உறுப்பினர்கள் இன்னும் நியமிக்கப்படவில்லை. சிலாங்கூரில் ஊராட்சி மன்றங்களில் 20 இடங்கள் அம்னோவுக்கு ஒதுக்கப்பட்டதோடு , ஜனவரி 9ஆம் தேதி சிலாங்கூர் மந்திரிபுசாருடன் அம்னோ பேச்சு நடத்தியபோதிலும் இந்த விவகாரத்தில் எந்த முடிவும் காணப்படாமல் தொடர்ந்து முட்டுக்கட்டை நீடித்து வருவதாக தெரிகிறது.