ஜொகூர் பாரு, மார்ச் 25 – ஜொகூர் பாரு, சுல்தான் இஸ்கண்டார் கட்டடத்தில் உள்ள சுங்க, குடிநுழைவு மற்றும் தனிமைப்படுத்தல் மையத்தில் (CIQ) 13 சேவை முகப்புகள் செயல்படாதது குறித்து மாநில மந்திரி பெசார் டத்தோ ஓன் ஹாவிஸ் காசி பெருத்த ஏமாற்றம் தெரிவித்துள்ளார்.
அவரே நேரில் சென்று அங்கு திடீர் சோதனையிட்ட போது கடும் கோபத்தில் அவரின் முகம் மாறிய வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கார்கள் செல்லும் பாதையில் 13 கவுன்டர்கள் திறக்கப்படாததால் கடும் நெரிசல் ஏற்பட்டதே மந்திரி புசாரின் சினத்திற்குக் காரணம்.
“என்னை ஆத்திரமூட்டாதீர்கள்” என கடும் சினத்தோடு அவர் கடிந்துக் கொள்வது வீடியோவில் தெரிகிறது.
பயனீட்டாளர்களிடம் இருந்து ஏராளமான புகார்கள் கிடைத்ததை அடுத்தே அந்த திடீர் சோதனையை தாம் மேற்கொண்டதாக அவர் சொன்னார்.
நெரிசல் முன்பை விட எவ்வளவோ முன்னேற்றம் கண்டிருப்பதாக தாம் இதற்கு முன் கூறியிருந்தது உண்மைதான். ஆனால் அதற்காக அதோடு திருப்தி அடைவதா என அவர் கேள்வி எழுப்பினார்.
இவ்விவகாரத்தை உள்துறை அமைச்சின் கவனத்துக்கு கொண்டுச் சென்றுள்ளதாகவும் MB சொன்னார்.