![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/05/MixCollage-29-May-2024-08-09-PM-9374.jpg)
ஜெரண்டுட், மே 29- ஜெரண்டுட்டிற்கு அருகே இரண்டு பெல்டா செம்பனை தோட்டங்களில் கடந்த இரண்டு ஆண்டு காலமாக 15 மாடுகளை புலி அடித்துக் கொன்றதால் கால்நடைகளை வளர்க்கும் ஐவருக்கு 35,000 ரிங்கிட் இழப்பு ஏற்பட்டுள்ளது. புலி தாக்கிவருவதால் தங்களது கால்நடைகளை அடுத்தடுத்து இழந்துவருவதாக பாதிக்கப்பட்ட குடியானவர்கள் தெரிவித்தனர்.
ஆகக் கடைசியாக நேற்று முன் தினம் Kota Gelanggi Empat செம்பனை தோட்டத்தில் சுதந்திரமாக மேய விடப்பட்ட தமது மாடுகளில் ஒன்று புலியினால் கடித்து குதறப்பட்டதால் மடிந்ததாக 29 வயதுடைய Mohamad Zulfia Hassan தெரிவித்தார். மாட்டின் முகத்தில் ஏற்பட்ட கடுமையான காயத்தினால் அது இறந்ததாக அவர் கூறினார்.
தற்போது அங்குள்ள செம்பனை தோட்டங்களில் கால்நடை வளர்ப்பவர்களுக்கு சொந்தமான இதர 40 மாடுகளுக்கும் புலியினால் மிரட்டல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதுவரை தமக்கு சொந்தமான மூன்று மாடுகள் புலியினால் தாக்கப்பட்டதால் மடிந்ததாக Mohamad Zulfia கூறினார். பெல்டா செம்பனை தோட்டத்திற்கு அருகேயுள்ள காட்டுப் பகுதியிலிருந்து இரை தேடிவரும் புலியினால் தங்களது கால்நடைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பலர் தெரிவித்தனர்.
இது குறித்து ஏற்கனவே வனவிலங்கு பூங்கா துறையிடம் புகார் அளித்ததன் காரணமாக புலியை வேட்டையாடுவதற்காக பொறி வைக்கப்பட்டபோதிலும் அதனை பிடிக்கும் முயற்சி இதுவரை வெற்றி பெறவில்லை. புலி மட்டுமின்றி காட்டு யானைகளும் தங்களுக்கு மிரட்டலாக உருவெடுத்துள்ளதாக அங்குள்ள குடியானவர்கள் தெரிவித்துள்ளனர்.