
கோலாலம்பூர், ஜூன்-12 – கெரிக் பேருந்து விபத்தில் 15 UPSI மாணவர்கள் பலியான சம்பவத்தை இழிவுப்படுத்தி சர்ச்சையில் சிக்கிய பள்ளி ஆசிரியர், அச்செயலுக்காக மன்னிப்புக் கோரியுள்ளார்.
அம்மாணவர்கள் அனைவரும் ‘மிகவும் இழிவான நிலையில் உயிரை விட்டிருப்பதாக’ Khalid Yunus எனும் அவ்வாடவர் முன்னதாக ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட பதிவு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
“PTPTN ‘கடன்காரர்களாக’ அவர்கள் மரணமடைந்துள்ளதால், அவர்கள் இறை விசுவாசுகள் அல்லர்; அவர்களுக்கு சொர்க்கம் கிடையாது, நிச்சயமாக நரகம் தான்” என சொல்லவே வாய் கூசும் வார்த்தைகளை அவர் கொட்டியிருந்தார்.
பிள்ளைகளை இழந்து வாடும் பெற்றோர்கள் மற்றும் குடும்பங்களோடு நாடே துயரத்தை பகிர்ந்துள்ள இச்சமயத்தில், அந்நபர் அதுவும் ஓர் ஆசிரியர் இப்படி ‘தரம்தாழ்ந்து’ பேசலாமா என பெரும் கண்டனங்கள் எழுந்தன.
அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்தன.
இதையடுத்து கல்வி இலாகாவும் அவ்வாசிரியர் விசாரிக்கப்படுவார் என உறுதியளித்தது.
இந்நிலையில் மன்னிப்புக் கேட்டுள்ள அவ்வாசிரியர், சர்ச்சைக்குரிய பழையப் பதிவை நீக்கியுள்ளார்.
அதோடு, தனக்கு skizofrenia நோய் இருப்பதாகவும், இது ஒழுங்கற்ற சிந்தனை மற்றும் மாயைகள் அல்லது செவிப்புலன் மாயத்தோற்றங்களை அனுபவிப்பதற்கு ஒப்பானது என்றும் அவர் கூறிக் கொண்டுள்ளார்.
மன்னிப்புக் கேட்டாலும் அவரை விடக்கூடாது என வலைத்தளவாசிகள் வலியுறுத்தியுள்ளனர்.