Latestமலேசியா

சட்ட நடவடிக்கையால் பெட்ரோனாஸ் – சரவாக் அரசாங்கம் இடையே முற்றும் மோதல்

கூச்சிங், மே-3 – எரிவாயுவை பதப்படுத்துதல் மற்றும் விநியோகம் செய்தலை சட்டவிரோதமாக மேற்கொள்வதாகக் கூறி, பெட்ரோனாஸின் துணை நிறுவனமான PCSB எனப்படும் Petronas Carigali Sdn Bhd-டுக்கு, சரவாக் அரசாங்கம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சரவாக் வசதிக் கட்டமைப்பு மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சிடமிருந்து ஏப்ரல் 30-ஆம் தேதி அந்த நோட்டீஸ் கிடைக்கப் பெற்றதை, பெட்ரோனாஸ் உறுதிப்படுத்தியது.

எனினும் சரவாக் கரையோரத்தில் Petronas Carigali சட்டவிரோதமாக செயல்படுவதாகக் கூறப்படுவதை, பெட்ரோனாஸ் திட்டவட்டமாக மறுத்தது.

PDA எனப்படும் 1974-ஆம் ஆண்டு பெட்ரோலியம் மேம்பாட்டு சட்டத்தின் படியே எல்லாமும் நடக்கிறது; சரவாக் அரசின் அபிலாஷைகளை மதிக்கும் அதே வேளை, PDA சட்டத்தை நிலை நிறுத்துவதும் நாட்டின் நலனைப் பாதுகாப்பதும் தங்களது கடமை என பெட்ரோனாஸ் விளக்கியது.

எனவே, தொழில்துறை, மாநிலம் மற்றும் நாட்டின் நன்மைக்காக இந்த பெட்ரோலியம் தோண்டும் நடவடிக்கை தெளிவான விதிமுறைகளோடு தொடருவதை உறுதிச் செய்ய, மத்திய அரசு, சரவாக் அரசாங்கம் மற்றும் Petros-சுடன் அணுக்கமாக ஒத்துழைக்கவும் பெட்ரோனாஸ் உறுதிப்பூண்டுள்ளது.

எது எப்படி இருப்பினும், கடைசிப் பயனர் முதல் முதலீட்டாளர் வரை அனைவரின் உரிமைகளும் நலன்களும் பாதுகாக்கப்படுமென அந்நிறுவனம் உறுதியளித்தது.

மீரி கச்சா எண்ணெய் முனையத்தில் PCSB சட்டவிரோதமாக செயல்படுவதாகக் கூறி, அதற்கெதிராக சரவாக் அரசாங்கம் சட்ட நடவடிக்கையில் இறங்கியிருப்பதாக Business Times முன்னதாக செய்தி வெளியிட்டிருந்தது.

தேவைப்படும் உரிமத்தை 21 நாட்களுக்குள் எடுக்கா விட்டால் நிதி அபராதம் விதிக்கப்படுமென்றும் அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டது.

Petroleum Sarawak Berhad அல்லது Petros வாயிலாக, மாநில பெட்ரோல் மற்றும் எரிவாயு வளங்கள் மீது மேலதிகக் கட்டுப்பாட்டைப் பெற சரவாக் அரசாங்கம் முயன்று வருகிறது.

அவ்வகையில் நாட்டின் ஹைட்ரோகார்பன் வளங்கள் மீது பெட்ரோனாஸ் முழு ஆதிக்கம் செலுத்துவதை அனுமதிக்கும் 1974 PDA சட்டத்தை சரவாகக் கடுமையாக எதிர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!