கோலாலம்பூர், பிப் 6 – தமது பராமரிப்பின் கீழ் விடப்பட்ட 18 மாத குழந்தை T. ஹுதேஸை கொலை செய்ததாக அக்குழந்தையின் தந்தையின் உறவினரான M. கேசிகன் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. 28 வயதுடைய கேசிகன் கடந்த ஜனவரி 24ஆம்தேதி இரவு மணி 11.15 அளவில் தாமான் புத்ரா டமாய் லெம்பா சுபாங், PPR குடியிருப்பு பகுதியில் இக்கொலையை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டார். குற்றவியல் சட்டத்தின் 302 ஆவது விதியின் கீழ் அவருக்கு எதிராக இந்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. மாஜிஸ்திரேட் ஃபரா அஸுரா முகமட் சாட் முன்னிலையில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது அதனை புரிந்துகொண்டதற்கு அடையாளமாக கேசிகன் தலையசைத்தார்.
வேலைக்கு செல்வதால் குழந்தை ஹுதேஸை அவனது பெற்றோர்கள் குற்றஞ்சாட்டப்பட்ட நபரிடம் விட்டுச் சென்றுள்ளனர். அக்குழந்தையின் மரணம் தொடர்பில் கடந்த மாதம் ஒரு தம்பதியரை போலீசார் கைது செய்தனர். இந்த குற்றச்சாட்டு உயர்நீதிமன்றத்தின் அதிகாரத்திற்கு உட்பட்டதாக இருப்பதால் கேசிகனிடம் வாக்குமூலம் எதுவும் பதிவு செய்யப்படவில்லை. அவர் மீதான் குற்றச்சாட்டு ஏப்ரல் 3ஆம் தேதி மறுவாசிப்புக்கு செவிமடுக்கப்படும் .