புத்ராஜெயா, மார்ச் 29- நாட்டில் 2 பில்லியன் ரிங்கிட்டிற்கும் கூடுதலாக இழப்பை ஏற்படுத்தியுள்ள கடத்தல் திட்டத்தில் சம்பந்தப்பட்ட 34 சுங்க அதிகாரிகளை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC கைது செய்துள்ளது. Sepangகிலுள்ள கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலைய சரக்கு மையம் வழியாக புகையிலை, சிகரெட்டுக்கள் மற்றும் மதுபானங்கள் சட்டவிரோதமாக கடத்தப்படுவதாக MACC யின் தலைமை ஆணையர் டான்ஸ்ரீ Azam Baki தெரிவித்திருக்கிறார். துணை அமலாக்க அதிகாரிகளான 19 Grades முதல் 44 Grades வரையிலான துணை இயக்குனர் வரை 30 முதல் 50 வயதுக்குப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக இன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியில் MACC யின் சட்டவிரோத பண பரிமாற்ற பிரிவின் இயக்குநர் டத்தோ Mohamad Zamri Zainul Abidin னும் கலந்து கொண்டார். 2017ஆம் ஆண்டு முதல் மிகவும் தீவிரமாக செயல்பட்டு வந்த இந்த கும்பலின் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த 27 தனிப்பட்ட நபர்கள் மற்றும் வர்த்தக உரிமையாளர்களை MACC கைது செய்துள்ளது.
2009ஆம் ஆண்டின் MACC சட்டத்தின் 17 ஆவது விதி உட்பிரிவு (a) யின் கீழ் இந்த விவகாரம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மார்ச் 11 ஆம் தேதி தொடங்கிய Operation Samba 2.0 நடவடிக்கையின் மூலம் வருமான வரி வாரியம் மற்றும் Bank Negara Malaysia வின் ஒத்துழைப்போடு MACCயின் சட்டவிரோத பண பரிமாற்றப் பிரிவு மேற்கொண்ட நடவடிக்கையைத் தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டடனர். மதுபானங்கள், சிகரெட்டுகள், புகையிலை மற்றும் வரி பிரகடனம் செய்யாமல் இதர பொருட்களை நாட்டிற்குள் கடத்தி வருவதற்கு இந்த கும்பல்கள் இடைத்தரகர்களாக செயல்படும் கப்பல் நிறுவனங்களின் முகவர்கள் முதல் அமலாக்க அதிகாரிகள்வரை பணம் கொடுத்து வந்ததும் தெரியவந்துள்ளது. Shell நிறுவனங்கள், வர்த்தக கணக்காய்வாளர்கள், நாணயங்களை பரிமாற்றுவோர் மற்றும் லைசென்ஸ் பெற்ற வட்டிக்கு விடுவோர் மூலம் பண பரிமாற்றத்தில் ஈடுபடுவதும் தெரியவந்துள்ளது. இதற்கு முன் இதே விவகாரம் தொடர்பில் 10 அரசு ஊழியர்களையும் இதர ஐவரையும் MACC கைது செய்திருந்தது. மேலும் விசாரணைக்கு உதவும் பொருட்டு ஐந்து அரசு ஊழியர்கள் உட்பட 11 தனிப்பட்ட நபர்களையும் MACC கைது செய்து தடுத்து வைத்திருந்தது.