
கோலாலம்பூர், மே 14 – நாடறிந்த இசைக் கலைஞர் வித்வான் ஸ்ரீ அங்கப்பன் பிள்,ளை காலமானார். கிட்டத்தட்ட 70 ஆண்டு காலம் மிருதங்கம், தபேலா இசையின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றிய கலைஞராக விளங்கிய 91 வயதான அவர் பூச்சோங்கில் உள்ள தனது இல்லத்தில் நேற்று காலையில் இறந்தார்.
ஜொஹாரி சாலே தலைமையிலான ஆர்.டி.எம் இசைக்குழுவில் 30 ஆண்டுக்கும் மேலாக இடம் பெற்றிருந்த ஒரே தமிழ்க் கலைஞராகவும் அவர் திகழ்ந்தார்.
இசைத் தென்றல் மாரியப்பப்பன்
தலைமையிலான சிவரஞ்சனி இசைக்குழுவிலும் அவர் முன்னணி கலைஞராக பணியாற்றியுள்ளார். பரத நாட்டிய அரங்கேற்றம் மற்றும் நடன நிகழ்ச்சிகளிலும் அவர் இசை பெரும் பங்காற்றியதை மறக்க முடியாது. அங்கப்பன் பிள்ளை நான்கு தலைமுறைகளாக இந்தியப் பாரம்பரிய இசை மற்றும் அனைத்துலக இசை அரங்கில் புகழ்ப்பெற்ற இசைக் கலைஞராகத் திகழ்ந்தவர்.
1920-களில் அனைவருக்கும் நன்கு அறிமுகமான இசைக் கலைஞராகத் திகழ்ந்த இவரது தந்தை ஆர். தங்கவேலு பிள்ளை அவர்களின் வழிகாட்டுதலின் பேரில், இவரது இசைப் பயணம் தொடங்கியது. அங்கப்பன் , மிருதங்கம் மட்டுமில்லாமல், தபேலா இசைப்பதிலும் கைத்தேர்ந்தவராகவே இருந்தார்.
1991-ஆம் ஆண்டு அனைத்துலக டோக்கியோ இசை விழாவில் , சைனல் அபிதின் குழுவுடன் இணைந்து , அந்த அணிக்கு ‘கோல்டன் மியூசிக் அவார்டு’ என்ற உயரிய விருதைப் பெற்றுத் தந்த பெருமையும் இவருக்கு உண்டு. இசைப் படைப்புகள் மட்டுமின்றி, தன் இசை அனுபவத்தையும் , இதுநாள் வரை தான் கற்றுத் தேர்ந்த இசையறிவையும் பல மாணவர்களுக்குக் கற்றுக்கொடுத்து அவர்களையும் நாடு போற்றும் வாத்தியக் கலைஞராக வளர வழிகாட்டி பெருமையடைந்துள்ளார்.
நமது நாட்டின் கலைப்புகழை , அனைத்துலக அரங்கில் ஒளிரச்செய்த அங்கப்பன் பிள்ளை எனும் இந்த மாபெரும் இசைக்கலைஞன் என்றும் நம் மனதில் இசையின் நாதமாய் ஒலித்துக்கொண்டிருப்பார் .
மேல் விவரங்களுக்கு வேணி 012 -2529853, பிரமிளா 016 -2957329 , பிரசாத் 012 -3290505 ஆகியோரிடம் தொடர்பு கொள்ளலாம்