
பத்து மலை, ஆகஸ்ட்-23 – சமுதாயத்திற்காகத் தன்னலமின்றிச் சேவையாற்றிய 20 தன்னலமற்ற நாயகர்களை ‘Unsung Heroes’ என்றப் பெயரில் கௌரவிக்கும் வகையில், ‘மின்னல் எஃப்.எம் 2026 பாராட்டு விழா’ சிலாங்கூர், பத்து மலையில் உள்ள ஷெங்கா மாநாட்டு மையத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
“சமூகத்திற்கு ஊக்கமளிப்போம், நாயகர்களை அங்கீகரிப்போம், நம்பிக்கையை உருவாக்குவோம்” என்ற கருப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில், டத்தோ ஸ்ரீ தெய்வீகன் ஆறுமுகம், பேராசிரியர் டத்தோ டாக்டர் ரிஷ்யா மாணிக்கம், சுரேன் கந்தா, S.K.சுந்தரம் மற்றும் டத்தோ ஸ்ரீ Dr மோகனாண்டி உட்பட 20 பேருக்கு உயரிய விருதுகள் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டன.
ஒளிபரப்புத்துறை தலைமை இயக்குநர் அஷ்வாட் இஸ்மாயில், Capital A குழும தலைமைச் செயல் அதிகாரி தான் ஸ்ரீ தோனி பெர்னாண்டஸ் மற்றும் மின்னல் எஃப்.எம் மேலாளர் குமரன் சுப்ரமணியம் ஆகியோர் முன்னிலையில் இவ்விருதுகள் வழங்கப்பட்டன.
இவ்வாண்டு நிகழ்வு குறித்தும் விருது பெற்றவர்கள் குறித்தும் மின்னல் எஃப்.எம் மேலாளர் குமரன் வணக்கம் மலேசியாவிடம் பேசினார்.
இதுபோன்ற விருதளிப்புகள் சேவையாளர்களை மேலும் ஊக்கப்படுத்தும் என அஷ்வாட் இஸ்மாயில் கூறினார்.
இந்த விருதளிப்புக்கு ஆதரவாளராக இருந்தது பெருமை என, தான் ஸ்ரீ தோனி பெர்னாண்டஸ் சொன்னார்.
விருது பெற்ற சிலரும் தங்களின் மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டனர்.
எதிர்கால தலைமுறைக்கு முன்மாதிரியாகத் திகழும் இத்தகைய உண்மையான நாயகர்களின் பங்களிப்பைப் போற்றுவதோடு, மின்னல் எஃப்.எம் வானொலியின் முதல் அரையாண்டு சாதனைகளையும், அதன் வியூகப் பங்காளிகளையும் அங்கீகரிக்கும் வகையில் இந்த மாபெரும் விழா இனிதே அமைந்தது.



