கோலாலம்பூர், ஜன 1 – நாடு முழுவதிலும் கடந்த ஆண்டு நிகழ்ந்த 598,635 சாலை விபத்துகளில் 12,417 பேர் உயிரிழந்தனர். இவர்களில் சிலாங்கூரில் 2,092 பேரும், அற்கு அடுத்த நிலையில் ஜோகூரில் 2,010 பேரும் பேராவில் 1,321 பேரும் மரணம் அடைந்தனர். 2023 ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம்தேதி தொடங்கி டிசம்பர் 30 ஆம்தேதிவரை 2,331 கோர விபத்துக்கள் நிகழ்ந்துள்ளதாக புக்கிட் அமான் போக்குவரத்து விசாரணை அமலாக்க துறையின் துணை இயக்குனர் டத்தோ முகமட் நஸ்ரி ஒமர் தெரிவித்தார்.
புத்தாண்டுக்கு முதல் நாள் ஜாலான் டூத்தா டோல் சாவடியில் “Ops Ambang Tahun Baharu” சோதனைக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் இத்தகவலை வெளியிட்டார். கடந்த ஆண்டு சிலாங்கூரில் மட்டும் 173,129 சாலை விபத்துக்கள் நிகழ்ந்தன, அதற்கு அடுத்த நிலையில் ஜோகூரில் 87,370 விபத்துக்களும் , கோலாலம்பூரில் 72,701 விபத்துக்களும் நிகழ்ந்ததாக அவர் கூறினார்.