கோலாலம்பூர், நவ 28 – போதைப் பொருள் குற்றத்திற்காக தற்போது கம்போடியாவில் சிறை தண்டனை அனுபவித்துவரும் மலேசியாவைச் சேர்ந்த K. ஹேமகவின் தமது தண்டனையில் 20 ஆண்டுகாலம் நிறைவேற்றிய பின்னரே அவருக்கு அரச மன்னிப்பு வழங்வதற்கு பரிசீலிக்கப்படலாம் என வெளியுறவு அமைச்சு தெரிவித்திருக்கிறது. அப்படியே இருந்தாலும் அவரது சிறைத் தண்டனையில் ஒரு ஆண்டு மட்டுமே குறைக்கப்படும் அல்லது அவரது சிறைத் தண்டனையில் மூன்றில் ஒரு பகுதி குறைக்கப்படலாம் என வெளியுறவுத்துறை துணையமைச்சர் முகமட் ஆலமின் தெரிவித்தார். எனினும் பெண்கள் மற்றும் வயதான கைதிகளுக்கு மட்டுமே மற்றும் போதைப் பொருள் அல்லாத குற்றங்களில் சம்பந்தப்பட்டவருக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்படும் என நேற்று நாடாளுமன்றத்தில் வழங்கிய எழுத்துப்பூர்வமான பதிலில் முகமட் ஆலமின் தெரிவித்துள்ளார்.
கம்போடியாவில் போதைப் பொருள் குற்றத்திற்காக தண்டனை அனுபவித்துவரும் ஹேமகவின் விடுதலைக்கான முயற்சி குறித்து பக்காத்தான் ஹராப்பான் சுபாங் நாடாளுமன்ற உறுப்பினர் வோங் சென் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்தபோது முகமட் ஆலமின் இதனை தெரிவித்தார். போதைப் பொருள் குற்றத்திற்காக 2017ஆம் ஆண்டு முதல் ஹேமகவின் 25 ஆண்டு சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். அவரது குற்றத்தை 2018ஆம் ஆண்டு கம்போடிய மேல் முறையீடு நீதிமன்றம் 2018ஆம் ஆண்டு நிலைநிறுத்தியது. நொம்பென்னிலுள்ள மலேசிய தூதரகத்தின் பிரதிநிதிகள் அடிக்கடி சிறைக்கு சென்று ஹேமகவினை சந்தித்து வருவதாகவும் ஆகக்கடைசியாக ஜூலை 26ஆம் தேதி அவர்கள் ஹேமகவினை சந்தித்ததாக முகமட் ஆலமின் தெரிவித்தார்.