கோலாலம்பூர், ஜன 1 – இன்று பிறந்திருக்கும் 2024 புத்தாண்டு நாட்டிற்கும் மக்களுக்கும் ஆக்கப்பூர்வமான மாற்றங்களை கொண்டு வரட்டும் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.
2023ஆம் ஆண்டில் ஒற்றுமை அரசாங்கம் பல்வேறு சவால்களை எதிர்நோக்கிய போதிலும் குறைந்த பணவீக்கம் மற்றும் வேலையில்லா விகிதத்தை குறைப்பது உட்பட பல்வேறு வெற்றிகளை கொண்டு வந்திருப்பதை அன்வார் சுட்டிக்காட்டினார்.
வாழ்க்கை செலவினம் அதிகரித்து வருவதால் மக்களின் சிரமத்தை குறைப்பதற்கான முயற்சியாக நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் தங்களது முயற்சிகளில் அரசாங்க தலைவர்கள் கவனம் செலுத்த வேண்டியது மிகவும் முக்கியம் என அவர் வலியுறுத்தினார்.
பணவீக்கம், வேலையில்லா விகிதம் வாழ்க்கை செலவினம் ஆகியவற்றை முடிவுக்கு கொண்டு வந்து மக்களுக்கு தரமான கல்வி, சுகாதாரம் மற்றும் அவர்களுக்கான சேவைகளுக்கான உத்தரவாதம் உறுதிப்படுத்தப்படும் என தமது புத்தாண்டு வாழ்த்து செய்தியில் அன்வார் தெரிவித்தார்.
மக்களுக்கான சேவைகளை மேம்படுத்துவதோடு அவர்களது நலன் மற்றும் நன்மையை மேம்படுத்துவதற்காக ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறினார்.
வாழ்க்கை செலவின சுமையினால் பாதிக்கப்படுவோருக்கு உதவ வேண்டும். எனவே, புத்தாண்டு மலேசியர்களுக்கு ஆக்கப்பூர்வமான மற்றும் நல்ல மாற்றங்களை கொண்டு வரும் என அன்வார் நம்பிக்கை தெரிவித்தார்.
பொருளாதாரத்தில் முழுக் கவனம் செலுத்துவதுதான் தலைவர்கள் மற்றும் அனைத்து தரப்பினரின் பொறுப்புணர்வாக இருக்க வேண்டும் என அன்வார் கேட்டுக்கொண்டார்.