
கோலாலம்பூர், மே-27 – புதிய தேசிய ஒப்பந்தத்தின் மூலம் இந்தியச் சமுதாயத்தை மேம்படுத்த முடியும் என, பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணிக் கட்சியான MIPP கருதுகிறது.
சிங்கப்பூரில் ISEAS எனப்படும் யூசோஃப் இஷாக் கழகத்தில் அண்மையில் உரையாற்றிய போது, மலேசிய எதிர்கட்சித் தலைவர் டத்தோ ஸ்ரீ ஹம்சா சைனுடின் அப்பரிந்துரையை முன்வைத்தார்.
இது, நியாயமும் சமத்துவமும் அடிப்படையாகக் கொண்ட முழுமையான மறுசீரமைப்பை நோக்கி எடுக்கப்படும் தைரியமான – முன்னேற்றமான ஒரு அடியெடுப்பாகும் என, MIPP தலைவர் புனிதன் பரமசிவன் கூறினார்.
இது அரசியல் மற்றும் பொருளாதார துறைகளில் அடிக்கடி காணப்படும் சிக்கல்களை கையாளும் ஒரு திட்டமிட்ட நோக்கத்தை வெளிப்படுத்துகிறது.
ஒரு பொதுவான குறிக்கோள், பொதுவான வளமை மற்றும் இரக்கமுள்ள நிர்வாகம் ஆகிய 3 அம்சங்களை, பெர்சாத்து துணைத் தலைவருமான ஹம்சா முன் வைத்த பரிந்துரை தாங்கி நிற்கிறது.
அரசியலமைப்புச் சட்டத்தில் நமக்குள்ள உரிமைப் பற்றி தெரியும்; இப்போது தேவைப்படுவதெல்லாம் அரசியலமைப்பு முறையிலான அணுகுமுறையே ஆகும்.
அவ்வகையில் நேர்மை, நலன், சமூக நீதி, அரவணைப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு புதி நம்பிக்கையாக இந்த தேசிய ஒப்பந்தம் அமையுமென புனிதன் சொன்னார்.
அமைப்பு முறை சிக்கல்களாலும் பலவீனங்களாலும் இந்நாட்டு இந்தியச் சமூகம் மேற்கல்வி வாய்ப்புகள், வேலையின்மை, புறநகர் ஏழ்மை, மோசமான சுகாதார பராமரிப்பு, மற்றும் முடிவெடுக்கும் பொறுப்புகளில் போதிய பிரதிநிதித்துவம் இல்லாதது போன்ற பிரச்னைகளை எதிர்நோக்குகின்றன.
ஆக, 4E எனப்படும் Education (கல்வி), Employment ( வேலை வாய்ப்பு), Economic (பொருளாதாரம்), Empowerment (வலுவூட்டுதல்) ஆகிய 4 அடிப்படை அம்சங்களை முன்னிறுத்து இனி முன்னேறுவோம்.
‘மேலும் சிறந்த மலேசியா’ என்பது வெறும் கனவல்ல.
பெரிக்காத்தான் முன்னெடுக்கும் இந்த புதிய தேசிய ஒப்பந்த முயற்சி மலேசிய இந்தியர்களின் கரங்களை வலுப்படுத்தி நல்லதொரு எதிர்காலத்தை உருவாக்கும் என புனிதன் நம்பிக்கைத் தெரிவித்தார்.