கோலாலம்பூர் , டிச 3 – பினாங்கு கெபாலா பத்தாசில் சிறப்பு தேவைகளுக்கான இடைநிலைப் பள்ளியைச் சேர்ந்த 14 பள்ளிப் பிள்ளைகளை மானப்பங்கப்படுத்தியது தொடர்பில் 13 வயது மாற்றுத் திறனாளி மாணவன் ஒருவன் கைது செய்யப்பட்டான். இச்சம்பவம் தொடர்பில் அப்பள்ளியின் தலைமையாசிரியர் வெள்ளிக்கிழமையன்று புகார் செய்ததைத் தொடர்ந்து அந்த சந்தேகப் பேர்வழி அன்றைய தினமே கைது செய்யப்பட்டதாக வட செபராங் பெராய் போலீஸ் தலைவர் அஸ்ரி ஷஃபி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட 13 முதல் 14 வயதுடைய அந்த பள்ளிப் பிள்ளைகள் கற்றல் மற்றும் செவித்திறன் குறைபாடு , பார்வையில்லாமலும் மற்றும் மன இறுக்கம் போன்ற பிரச்சனைகளையும் கொண்டவர்கள் என அவர் கூறினார்.
சிறாருக்கு எதிரான உடல் ரீதியிலான பாலியல் தாக்குதல் என்ற அடிப்படையில் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அஸ்ரி தெரிவித்தார்.
இது போன்ற சம்பவங்கள் குறித்த தகவலை மறைக்கக்கூடாது என பொதுமக்களை அஸ்ரி கேட்டுக்கொண்டார். சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை புகார் செய்ய மறைத்தால் அவர்களுக்கு 5,000 ரிங்கிட்வரை அபராதம் விதிக்கப்படலாம் . பாலியல் குற்றங்கள் குழந்தைகளின் உணர்ச்சி மற்றும் மன ஆரோக்கியத்தில் நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.