கோலாலம்பூர், நவ 30 – அண்மையில் மலாயா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் 24 ஆண்டுகளுக்குப் பிறகு அரச விருது பெற்று பெற்றோர்களுக்கும் இந்திய சமூகத்திற்கும் பெருமை சேர்த்திருக்கிறார் இளவரசன் தமிழ்ச்செல்வன். ஆகக் கடைசியாக 1999ஆம் ஆண்டில்தான் மலாயாப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு இந்திய மாணவருக்கு இவ்விருது வழங்கப்பட்டது. அதன் பிறகு 24 ஆண்டுகளுக்குப் பின்னர் இவ்வருடம்தான் இந்த விருது ஒரு இந்தியருக்கு வழங்கப்பட்டுள்ளது.
நெகிரி செம்பிலான் , கெமெஞ்சேஃபெல்டா புக்கிட் ரோகானைச் சேர்ந்த இளவரசன் அரச விருதுக்கான பதக்கத்துடன், 7500 ரிங்கிட் வெகுமதி மற்றும் சான்றிதழ் பெற்றது குறித்து மிகுந்த மகிழ்ச்சியுடன் இருப்பதோடு இப்படியொரு விருது கிடைத்தது தமது உழைப்பிற்கு கிடைத்த வெற்றி என்று வணக்கம் மலேசியாவிடம் கூறுகிறார்.
பொதுவாகவே அரசாங்க பல்கலைக்கழகத்தில் பட்டம் பெறும் மாணவர்களுக்கு அரச விருது வழங்கப்படுவது மாணவர்களுக்கு கிடைக்கும் மிகப் பெரிய கௌரவமாக கருதப்படுகிறது. அரச விருதுக்கு ஒரு மாணவர் எப்படி தேர்வு செய்யப்படுகிறார் மற்றும் அதற்கான தகுதி என்ன என்று இளவரசன் விளக்கமளிக்கிறார்.
பரப்பரப்பான பல்கலைக்கழக வாழ்க்கையில் படிப்பு ஒரு புறம் இருந்தாலும் அனைத்து நடவடிக்கையில் கலந்துகொள்வதற்கு நேரத்தை ஒதுக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். பல்கலைக்கழகத்திற்கு வரும் மாணவர்கள் பட்டம் பெறுவதற்காக, கல்வியில் கவனம் செலுத்துவதோடு மட்டுமின்றி தங்களது தலைமைத்துவத்தை நிருபிப்பது உட்பட புறப்பாட நடவடிக்கையில் கவனம் செலுத்தினால் அரச விருதை பெறும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என்பதை இளவரசன் நிருபித்து காட்டியுள்ளார். அவரை வணக்கம் மலேசியா வாழ்த்துகிறது .