கோலாலம்பூர், ஜனவரி 11 – மூன்று வயது சிறுவனை, கிள்ளி, கடித்து காயப்படுத்தியதோடு, கால் முறியும் வரையில் அவனை அடித்ததாக நம்பப்படும், அந்நிய பெண் பராமரிப்பாளர் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
காயம் காரணமாக சுயநினைவை இழந்ததை அடுத்து, கடந்த திங்கட்கிழமை அச்சிறுவன், கோலாலம்பூர் மருத்துவமனையின், அவசர பிரிவில் அனுமதிக்கப்பட்டான். அதனை தொடர்ந்து, அவன் சித்திரவதைக்கு இலக்கான விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது.
மூன்றாண்டுகளுக்கு முன், உள்நாட்டு அந்நிய தொழிலாளர் தருவிப்பு நிறுவனம் ஒன்றிடமிருந்து, தாம் அந்த அந்நிய பெண் பராமரிப்பாளரை வேலைக்கு அமர்த்தியதாக, அச்சிறுவனின் 36 வயது தாய் கூறியுள்ளார்.
எனினும், 2022-ஆம் ஆண்டு, சிறுவனின் உடலில் காயங்கள் தென்பட்டதை தொடர்ந்து, அவர் சம்பந்தப்பட்ட பெண்ணிடம் விசாரித்துள்ளார்.
சிறுவனை கொடுமை படுத்தியதை அப்பெண் மறுத்துள்ளார்.
எனினும், அண்மையில் நச்சுணவு காரணமாக சுயநினைவை இழந்த அச்சிறுவன், அவசர கண்காணிப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து, அப்பெண் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது.
இதனிடையே, சிறுவன் சித்திரவதைக்கு இலக்கான சம்பவம் தொடர்பில், அவனது தாயாரிடமிருந்து புகார் கிடைத்துள்ளதை உறுதிப்படுத்திய டாங் வாங்கி போலீஸ் தலைவர் அசிஸ்டன் கமிஸ்னர் நோர் டெல்ஹான் யாஹ்யா, 2001-ஆம் ஆண்டு சிறார் சட்டத்தின் கீழ், அப்பெண்ணை போலீசார் தேடி வருவதாக சொன்னார்.