கிள்ளான், நவ 29 – மலாக்கா நீரிணையில் சட்டவிரோத நுழைவு பகுதியின் மூலம் நாட்டிற்குள் நுழையவிருந்த 413 சட்டவிரோத குடியேறிகளின் முயற்சியை மலேசிய கடல் பாதுகாப்பு அமலாக்க நிறுவன அதிகாரிகள் முறியடித்தனர். இவ்வாண்டு ஜனவரி முதல் இதுவரை சட்டவிரோத குடியேறிகள் நுழையும் 51 நடவடிக்கைகளை மலேசிய கடல் பாதுகாப்பு அமலாக்க நிறுவனம் முறியடித்துள்ளதாக அந்நிறுவனத்தின் அமலாக்க பிரிவின் இயக்குனர் R. வின்சென்ட் தெரிவித்தார்.
சட்டவிரோத குடியேறிகள் நாட்டிற்குள் நுழைவதை தடுப்பது, கடற்கொள்ளையர்களை முறிடிப்பது மற்றும் வெளிநாட்டு மீனவர்கள் மலேசிய கடல் பகுதியில் ஊடுருவுவதை தடுப்பது போன்ற நடவடிக்கைகளில் கடல் பாதுகாப்பு அமலாக்க நிறுவனம் கவனம் செலுத்துவதாகவும் அவர் கூறினார். மொத்தத்தில் மலேசிய கடல் பகுதியில் பாதுகாப்பு விவகாரங்களில் தங்களது நிறுவனம் முழுமையாக கவனம் செலுத்தி வருவதோடு சட்டவிரோத குடியேறிகளை நாட்டிற்குள் கடத்தி கொண்டுவரும் நடவடிக்கையும் தடுப்பதற்கு கடல் ரோந்து நடவடிக்கைகளிலும் தாங்கள் தீவிர கவனம் செலுத்தி வருவதையும் வின்சென்ட் தெரிவித்தார்.