கோலாலம்பூர், ஜன 31 – 60 வயதுக்கு மேற்பட்டோர் அடையாளக் கார்டை கொடுத்து பி.எஸ்.என் (BSN) வங்கியில் 500 ரிங்கிட் பெற்றுக்கொள்ளலாம் என சமூக வலைத்தளங்களில் வெளியான தகவல் பொய் என அந்த வங்கி தெரிவித்துள்ளது. நேற்று மட்டும் 50க்கும் மேற்பட்டோர் பி.எஸ்.என் வங்கியில் காத்திருந்து ஏமாந்துள்ளனர் என பெயர் குறிப்பிட விரும்பாத அந்த வங்கியின் பணியாளர் ஒருவர் தெரிவித்தார். பலர் வாட்ஸ்அப் மூலம் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு 500 ரிங்கிட் கொடுப்பதாக கிடைக்கப்பெற்ற தகவலை எங்களிடம் காட்டுகின்றனர். இப்படியொரு தகவல் எதுவும் எங்களுக்கு கிடைக்கவில்லையென அந்த அதிகாரி தெரிவித்தார். இது தொடர்பாக உண்மையை அறிந்துகொள்வதற்கு வணக்கம் மலேசியா இன்று காலை ஷா அலாமிலுள்ள பி.எஸ்.என் வங்கிக்கு சென்று அங்குள்ள அதிகாரியிடம் விளக்கம் கேட்டபோது அப்படியெல்லாம் கிடையாது என அவர் தெரிவித்தார்.
அந்த வங்கியின் பாதுகாவலர்கூட அதிகமான இந்தியர்கள் நேற்று வங்கிக்கு வந்து கை தொலைபேசி மூலம் தங்களுக்கு வந்த தகவலை காட்டியதையும் தெரிவித்தார். எங்களுக்கு தெரிந்தவரை அரசாங்கத்தின் STR எனப்படும் “Sumbangan Tunai Rahmah”-வுக்கான 500 ரிங்கிட் உதவித் தொகை மட்டுமே வழங்கப்படுகிறது. இதன் முதற்கட்ட தொகைதான் இம்மாதம் 29ஆம் தேதி முதல் வங்கிகளில் அல்லது பி.எஸ்.என் வங்கிக் கணக்கில் 500 ரிங்கிட்டை மீட்க முடியும். எனவே உண்மைக்கு புறம்பாக சமூக வலைத்தளங்களில் வெளிவரும் தகவல்களை நம்ப வேண்டாம் என பொதுமக்களை அந்த அதிகாரி கேட்டுக்கொண்டார். மேலும் இதுபோன்ற தகவல்களை பெறுவோர் அதனை மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என்றும் அந்த அதிகாரி வலியுறுத்தினார். அண்மைய காலமாக ஓய்வு பெற்றவர்களை மோசடி செய்யும் சம்பவங்கள் அதிகமாக நடைபெற்று வருவதால் முன்பின் அறியாதவர்களிடம் வங்கிக் கணக்கு மற்றும் அடையாளக் கார்டு விவரங்களை வழங்க வேண்டாம் என்றும் பொதுமக்களை அந்த அதிகாரி கேட்டுக்கொண்டார்.