![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2023/11/MixCollage-28-Nov-2023-06-36-PM-1124.jpg)
புத்ரா ஜெயா, நவ 28 – 13 ஆண்டுகளுக்கு முன் 62 வயதுடைய கண்ணையா என்பவருக்கு மரணம் விளைவித்த குற்றத்திற்காக மூவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை இன்று 35 ஆண்டு சிறைத்தண்டனையாக மாற்றப்பட்டது. 37 வயதுடைய ரஞ்சிட் குமார், 42 வயதுடைய S. கோபி, மற்றும் 41 வயதுடை E. சங்கர் ஆகியோருக்கு அவர்கள் கைது செய்யப்பட்ட 2010 மற்றும் 2011 ஆம் ஆண்டிலிருந்து 35ஆண்டு சிறைத் தண்டனையை அனுபவிக்கும்படி ஐவர் கொண்ட கூட்டரசு நீதிமன்ற அமர்வு நீதிபதிக்கு தலைமையேற்ற மலாயா தலைமை நீதிபதி ஜாபிதீன் தியா உத்தரவிட்டார். அதோடு அந்த மூவருக்கும் தலா 12 பிரம்படிகளையும் விதிப்பதாக அவர் தமது தீர்ப்பில் தெரிவித்தார்.
இவ்வாண்டு தொடக்கத்தில் மரண தண்டணை ரத்துச் செய்யப்பட்டதை தொடர்ந்து கொலைக் குற்றத்திற்கு மாற்று தண்டனையாக 30 முதல் 40 ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனை அமல்படுத்தப்பட்டுள்ளது. சிலாங்கூர் , புக்கிட் அம்பாங் பெர்மாயிலுள்ள அடுக்குமாடி வீட்டிற்கு வெளியே கண்ணையா என்பவரை கொலை செய்த குற்றத்திற்காக ரஞ்சிட் குமார், கோபி மற்றும் சங்கர் ஆகியோருக்கு எதிரான மரண தண்டனையை கடந்த 2017 ஆம் ஆண்டு மார்ச் 23 ஆம் தேதி கூட்டரசு நீதிமன்றம் நிலைநிறுத்தியது. கடந்த 2010 ஆம் ஆண்டு ஆகஸ்டு 11 ஆம்தேதி அம்மூவரும் கண்ணையாவை கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டனர்.