![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/03/MixCollage-19-Mar-2024-07-53-PM-5597.jpg)
பட்டவொர்த், மார்ச் 19 – பினாங்கு புக்கிட் மெர்தாஜாமில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி சோதனையில், 70,240 ரிங்கிட் மதிப்பிலான 268 போலி முத்திரையைக் கொண்ட மோட்டார் சைக்கிள் ஹெல்மட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
மோட்டார் சைக்கிளோட்டிகள் மத்தியில் பிரபலமான Arai வர்த்தக முத்திரையைப் பயன்படுத்தி போலி ஹெட்மட்டுகளை விற்கும் கடையில் தான் அச்சோதனை மேற்கொள்ளப்பட்டது.
அந்த ஜப்பானிய முத்திரை நிறுவனம் செய்த புகாரின் அடிப்படையில் அச்சோதனை நடத்தப்பட்டதாக உள்நாட்டு வாணிபம் வாழ்க்கைச் செலவின அமைச்சின் பினாங்குக் கிளையின் இயக்குநர் எஸ்.ஜெகன் கூறினார்.
அதில் கைப்பற்றப்பட்ட 268 ஹெல்மட்டுகள் TSR ரகத்திலானவை; ஆனால் Nanago Shukiken Silver, Black Samurai, Oriental Blue போன்ற மாடல்களுக்கான Arai கலை சார்ந்த வர்த்தக முத்திரைகள் அவற்றில் இருந்ததாக ஜெகன் சொன்னார்.
இது 1987-ஆம் ஆண்டு காப்புரிமைச் சட்ட மீறலாகும்.
இது போன்ற குற்றங்களைப் புரிவோருக்கு, அதிகபட்சமாக 20,000 ரிங்கிட் அபராதமும், ஐந்தாண்டுகளுக்கு மேற்போகாத சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் என ஜெகன் சுட்டிக் காட்டினார்.
உலகப் புகழ்பெற்ற இந்த Arai ஹெல்மட்டுகள், ஜப்பானில் தயாரிக்கப்பட்ட முதல் ஹெல்மட் ரகம் என்பது குறிப்பிடத்தக்கது.