
புத்ராஜெயா, ஆக. 17 — எட்டு ஆண்டுகளுக்கு முன்பு 8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 76 வயது வயோதிகனுக்கு விதிக்கப்பட்ட 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் நான்கு பிரம்படித் தண்டனையை மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று உறுதி செய்தது.
மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, அந்நபர் தாக்கல் செய்த இறுதி மேல்முறையீட்டை ஒருமனதாக தள்ளுபடி செய்தது. பெர்லிஸ், ஆராவ் பகுதியிலுள்ள வீட்டில் 2018 டிசம்பர் 17ஆம் தேதி இந்தக் குற்றம் நிகழ்ந்ததாக நீதிமன்றம் தெரிவித்தது.
சிறுமியின் சாட்சியத்தில் முரண்பாடுகள் இருப்பதாகக் கூறி சந்தேகநபரின் வழக்கறிஞர் தண்டனையைக் குறைக்கவும், வயது மற்றும் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு பிரம்படித் தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கவும் கோரினார்.
எனினும், போர்வை மற்றும் ஆடையில் கண்டெடுக்கப்பட்ட விந்தணுவின் DNA, குற்றவாளியின் DNA-வுடன் பொருந்தியதாக துணை அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.
மேலும், பாலியல் குற்றங்களில் 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் பிரம்படித் தண்டனை விதிக்க சட்டம் அனுமதிப்பதாக அவர் கூறினார். தண்டனைக்கு உடல்நலக் காரணங்களால் தகுதியற்றவர் எனக் கருதப்பட்டால், மருத்துவ விலக்கு கோரலாம் என்றும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.



