கோலா திரங்கானு, ஏப்ரல் 4 – திரங்கானு, கோலா திரங்கானு, ஜாலான் பெஜாபாட்டில் சுற்றித் திரியும் தெரு நாய்களை பிடிக்க, பொறி வைக்கப்பட்டுள்ளது.
ஊராட்சி சட்டத்திற்கு உட்பட்டு, தெரு நாய்களை பிடிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக, கோலா திரங்கானு மாநகர் மன்றத் தலைவர் ரோஸ்லி லத்திப் கூறியுள்ளார்.
குறிப்பாக, பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் தெரு நாய்களை பிடிக்க, அச்சட்டம் ஊராட்சி மன்றத்திற்கு அதிகாரம் வழங்கி உள்ளதையும் ரோஸ்லி சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த ஞாயிற்றுகிழமை, தெரு நாய்களால் தாக்கப்பட்டு தலைமை தாதி ஒருவர் காயமடைந்த சம்பவத்தை தொடர்ந்து அந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
பிற்பகல் மணி 12.55 வாக்கில், விஸ்மா பெர்செகுதுவானில், கூட்டம் முடிந்து கார் நிறுத்துமிடத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்த போது, சிறார் விளையாட்டு மைதானத்திற்கு அருகிலிருந்து திடீரென தோன்றிய தெரு நாய்கள் சில, அவரை தாக்கியதாக கூறப்படுகிறது.
எனினும், அச்சம்பவத்தில் சம்பந்தப்பட்ட தாதி சிறு காயங்களுடன் தப்பினார்.
தெரு நாய்களை பிடிக்கும் நடவடிக்கை சில தரப்பினருக்கு அதிருப்தியை ஏற்படுத்தலாம் என்றாலும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிச் செய்ய அது அவசியம் என ரோஸ்லி கூறியுள்ளார்.