சிங்கப்பூர் – ஆஸ்திரேலியப் பொதுத் தேர்தல்களில் ஆளுங்கட்சிகளே அமோக வெற்றி

சிங்கப்பூர், மே-4- சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவில் சனிக்கிழமை நடைபெற்ற பொதுத் தேர்தல்களில் ஆளுங்கட்சிகளே அபார வெற்றிப் பெற்றுள்ளன.
இரு நாடுகளிலும் தேர்தல் கடுமையாக இருக்குமென்ற
கருத்துக் கணிப்புகளைப் பொய்யாக்கி, வாக்காளர்கள் நடப்பு அரசாங்கங்களுக்கு அமோக வெற்றியைக் கொடுத்துள்ளனர்.
சிங்கப்பூரில், ஆளும் PAP கட்சி 97 நாடாளுமன்றத் தொகுதிகளில் 87 இடங்களைக் கைப்பற்றியது.
அது பெற்ற மொத்த வாக்குகள் 65.57 விழுக்காடாகும்; 2020 பொதுத்தேர்தலை விட இது 4 விழுக்காடு அதிகமாகும்.
பிரதமர் என்ற முறையில் லாரன்ஸ் வோங் சந்தித்த இந்த முதல் தேர்தலில், சிங்கப்பூர் வாக்காளர்கள் அவருக்கு மூன்றில் 2 பங்குக்கும் அதிகமாகவே வெற்றியை அள்ளிக் கொடுத்துள்ளனர்.
செல்வாக்குமிக்க முன்னாள் பிரதமர் லீ சியென் லூங்கின் நிழலிருந்து விலகி, அரசாங்கத்தையும் PAP கட்சியையும் தன் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர இதன் மூலம் லாரன்ஸ் வோங்கிற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் 1965-ஆம் ஆண்டிலிருந்து PAP கட்சியே ஆட்சி செய்து வருகிறது.
இவ்வேளையில், ஆஸ்திரேலியாவில் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தலைமையிலான தொழிலாளர் கட்சி இரண்டாம் தவணையாக ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.
மொத்தமுள்ள 150 இடங்களில் இதுவரைக்குமான தகவலின் படி 87 இடங்களை அக்கட்சிக் கைப்பற்றியது.
பிரபலம் அல்லாத பிரதமர் என முத்திரைக் குத்தப்பட்டாலும் அல்பானீஸுக்கு ஆஸ்திரேலிய வாக்காளர்கள் அமோக வெற்றியைக் கொடுத்துள்ளனர்.
2004-காம் ஆண்டுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் ஒரே கட்சி ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டிருப்பது இதுவே முதன் முறையாகும்.
லாரன்ஸ் வோங், அந்தோணி அல்பானீஸ் இருவருக்கும் உலகத் தலைவர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.