
தஞ்ஞோங் மாலிம், மே 4 – நேற்று சனிக்கிழமை உப்சி வளர்த்தமிழ் மன்றத்தின் ஏற்பாட்டில்
நாடகச் சுடர் போட்டியானது உப்சி வளாக ஒத்திகைத் திரையரங்கத்தில் சிறப்பாக அரங்கேறியது.
உப்சி தமிழ்ப்பிரிவுத் தலைவர், இணைப்பேராசிரியர் முனைவர் கார்த்திகேஸ் பொன்னையா, உப்சி வளர்தமிழ் மன்ற மதியுரைஞர் முனைவர் இளங்குமரன் சிவநாதன் ஆகியோரின் ஆலோசனையோடு, உப்சி வளர்தமிழ் மன்றத் தலைவர் செல்வி சத்தியமலர் பரமசிவன், அவர் தம் செயலவையினரின் அயராத முயற்சியினால் இந்நாடகப் போட்டி சிறப்பாக நடத்தப்பட்டது.
தேசிய அளவில் நடத்தப்பட்ட இப்போட்டியின் சிறப்பம்சமே திருக்குறளை மையமாக வைத்து நாடகங்கள் அரங்கேறின என்பதுதான்.
இந்நிகழ்ச்சிக்குச் சிறப்பு பிரமுகராக பேராக் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் மாண்புமிகு திரு சிவநேசன் அச்சலிங்கம் அவர்களும், உப்சி பல்கலைக்கழகத்தின் நவீன மொழிப் பிரிவுத் தலைவர் முனைவர் தாஜ் ரீஜால் பின் முஹம்மத் ரோம்லி அவர்களும் கலந்து கொண்டனர்.
இப்போட்டியில் துவான்கு பைனூன் ஆசிரியர் கல்விக் கழகம், ஈப்போ ஆசிரியர் கல்விக் கழகம், ஈப்போ வளாகம், சுல்தான் சைனல் அபிடின் பல்கலைக்கழகம், மலேசிய பஹாங் மாநிலப் பல்கலைக்கழகம், உப்சி பல்கலைக்கழகம் போன்ற உயர்நிலைக் கல்விக் கூ டங்களிருந்து இருந்து மொத்தம் பத்து குழுக்கள் பங்குப்பெற்றன.
இப்போட்டிக்கு மலேசிய திரைப்படத்தின் மூத்த நடிகர் திவாகர் சுப்பையா, தொலைக்காட்சி தொகுப்பாளர், நாடறிந்த நடிகர் டேனிஷ் குமார் மற்றும் பூச்சாண்டி திரைப்படத்தின் இயக்குநர் விக்கினேஸ்வரன் கலியபெருமாள் ஆகியோர் நடுவர்களாக பணியாற்றினர்.
முதலாம் நிலையில் ஆசிரியர் கல்விக் கழகம் துவான்கு பைனூன் கழகத்தைச் சேர்ந்த வேதிக்கனல் குழு தட்டிச் சென்றது.
இதனிடையே, இரண்டாம் நிலையில் ஆசிரியர் கல்விக் கழகம் ஈப்போ வளாக நிழல்வெளி குழுவினரும் மூன்றாம் நிலையில் ஆசிரியர் கல்விக் கழகம் துவான்கு பைனூன் வளாகத் துளிரும் துடிப்புகள் குழுவினரும் பெற்றனர்.
நான்காம் நிலை ஆசிரியர் கல்விக் கழகம் துவான்கு பைனூன் வளாக அரங்கவில்லுகள் குழுவுக்கும் ஐந்தாம் நிலைப் பரிசு சுல்தான் சைனல் அபிடின் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த செந்தமிழ் திரைமன்றம் ஆகிய குழுவுக்கும் வழங்கப்பட்டது.