
கோலாலம்பூர், மே-11 – தன்னை மறந்துப் பிறருக்காக வாழும் ஒற்றை உருவமே அன்னை.
ஒரு பிள்ளையின் முதல் ஆசான், முதல் தோழி, முதல் பாதுகாவலர் அனைத்துமே தாயே; அவளுடைய பாசத்துக்கும், பொறுமைக்கும், தியாகத்துக்கும் எதுவும் ஈடில்லை என ம.இ.கா தேசியத் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ எம். சரவணன் புகழாரம் சூட்டினார்.
இன்று அனுசரிக்கப்படும் அன்னையர் தினத்தை ஒட்டி வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் அவ்வாறு சொன்னார்.
அம்மா ஒரு நிழல் இல்லை, நம்மை நிழலாய் காத்து வளர்த்த ஒளி.
ஆனால், தன்னலமற்ற தாயை, இன்றைய காலகட்டத்தில் பிள்ளைகள் உணர்வின்றி தவிக்க விட்டுவிடுவது மனதைக் கலங்கடிக்கிறது.
அன்பை மட்டுமே எதிர்பார்த்த அந்த தெய்வத்துக்கு நாம் செலுத்தும் “நன்றி” பணமும் பொருளும் அல்ல; மனச்சாட்சியோடு நடந்துகொள்வதே பெரிய உபகாரம் என்றார் அவர்.
அம்மாவின் அர்ப்பணிப்பை மனதில் கொண்டு, அவரது கால்களில் நம் நன்றியைச் சமர்ப்பிப்போம்; அன்றாட வேலைப்பளுவில் மறந்துவிடும் “நன்றி”என்ற வார்த்தையை தாயிடம் சொல்லும் சிறந்த வாய்ப்பு இது.
தாயின் பாசத்திற்கு ஒரு நாள் போதாது என்றாலும், அன்னையர் தினம் நம்மை அவர்களிடம் நன்றி கூற வைக்கும் ஒரு இனிய சந்தர்ப்பமாகிறது.
அன்னையர் தினம் என்பது பரிசுகளைக் கொடுப்பதற்கான நாள் மட்டும் அல்ல; தாயின் கண்ணில் புன்னகையை வரவழைக்கும் அன்பான சொற்களைச் சொல்லும் சிறப்பான நாளாகவும் இருக்க வேண்டும்.
எனவே தாயின் பாசத்திற்கு தலைவணங்கி அனைத்து தாய்மார்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துகளை டத்தோ ஸ்ரீ சரவணன் தெரிவித்துக் கொண்டார்.