
போர்ட் கிள்ளான், மே-13 – சிலாங்கூர், போர்ட் கிள்ளான் ஸ்ரீ பாலசுப்ரமணிய சுவாமி கோயிலில் நடைபெற்ற சித்திரா பௌர்ணமி திருவிழாவில் மிகச் சிறப்பாக நடைப்பெற்றது.
மலேசிய இந்தியர்களின் வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் இந்த போர்ட் கிள்ளானும் ஒன்றாகும். இங்கு வீற்றிருக்கும் ஸ்ரீ பாலசுப்ரமணிய சுவாமி கோயிலில் நடந்த இத்திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக் கொண்டு தங்களின் பக்தியை வெளிப்படுத்தினர்.
இதனிடையே. மஹிமா எனப்படும் மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து அமைப்புகள் பேரவையின் தலைவர் டத்தோ என். சிவகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து சிறப்பித்தார்.
18-ஆம் நூற்றாண்டில் கங்காணி முறையின் கீழ் இந்தியர்கள் இந்நாட்டுக்குள் நுழைவதற்கு இந்த போர்ட் கிள்ளான் முக்கியப் பங்கு வகித்தது.
அப்போதைய பிரிட்டிஷ் அரசாங்கத்தின் ஆதரவுடன், வழிபாட்டுத் தலங்களாகவும் சமூகமாகவும் கோயில்கள் கட்டப்பட்டன; இது புலம்பெயர்ந்த இந்தியர்கள் தங்கள் நம்பிக்கைகள் மற்றும் மரபுகளைப் பாதுகாக்க உதவியது.
இந்தச் சூழலில்தான் முருகனின் வேல் ஆரம்பகால குடியேறிகளின் ஆன்மீக வாழ்க்கையின் மையமாக மாறியது; தெய்வத்தை நிறுவுவதும் சடங்குகளின் தொடக்கமும் சமூகத்திற்கு ஒரு ஆன்மீக நங்கூரமாக அமைந்து, அது இன்றுவரை தொடர்கிறது.
இந்நிலையில், பக்தர்களின் ஆழ்ந்த நம்பிக்கையையும், நமது ஆன்மீக பாரம்பரியத்தையும் பாதுகாப்பதில் இந்த போர்ட் கிள்ளான் கோயிலின் தொடர் அர்ப்பணிப்பை காண்பது உண்மையிலேயே உற்சாகமாக இருப்பதாக சிவக்குமார் கூறினார்.
சுப்பிரமணியரின் ஆசீர்வாதங்கள் நம் அனைவரையும் ஒற்றுமை, வலிமை மற்றும் தர்மத்தின் பாதையில் தொடர்ந்து வழிநடத்தட்டும் என, அவர் தெரிவித்தார்.