Latestமலேசியா

தனிப்பட்ட தரவுகள் தொடப்படாது; தொலைப்பேசி அழைப்பு தரவுகளைச் சேகரிப்பதை தற்காக்கும் MCMC

புத்ராஜெயா, ஜூன்-7 – ஜனவரி முதல் மார்ச் வரையில் செய்யப்பட்ட அனைத்து கைப்பேசி அழைப்புகளுக்குமான தரவுகளை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கட்டாயம் ஒப்படைக்க வேண்டுமென்ற தனது உத்தரவை, மலேசியத் தொடர்பு – பல்லூடக ஆணையமான MCMC தற்காத்துள்ளது.

“எந்த தரவுகளையும் நாங்கள் தொடப்போவதோ, பயன்படுத்தப்போவதோ, வெளியிடப்போவதோ இல்லை” என அது தெளிவுப்படுத்தியது.

கேட்கப்பட்ட தரவுகளில் யாருடைய அடையாளங்களும் இல்லை; எந்தவொரு தனிநபரையும் அடையாளம் கண்டு பிடிக்கக் கூடிய தகவல்களும் இல்லை என அவ்வாணையம் கூறியது.

பாதுகாப்பான சொந்தச் சூழலில் அந்தத் தரவுகளை வெளியாக்கவோ அல்லது அடையாளம் நீக்கப்பட்ட தரவுகளை ஒப்படைக்கவோ தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு தேர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த 2 சூழ்நிலைகளிலும், பெறப்பட்ட தரவுகளிலிருந்து எந்தவொரு தனிப்பட்ட வாடிக்கையாளரையும் அடையாளம் காண முடியாது என அறிக்கையொன்றில் MCMC விளக்கியது.

மக்களின் இணையப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் விதமாக கைப்பேசி அழைப்பு மற்றும் இணையப் பயன்பாடு தொடர்பான விரிவான தரவுகளை வழங்குமாறு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கட்டாயப்படுத்தப்பட்டிருப்பதாக, தொழில்துறை வட்டாரங்களை மேற்கோள்காட்டி South China Morning Post நாளேடு முன்னதாக செய்தி வெளியிட்டிருந்தது.

இது சர்ச்சையானதால் MCMC இந்த விளக்கத்தை அளித்துள்ளது.

அரசாங்கத்தின் புள்ளிவிவரத் திரட்டுக்கான புதிய வளமாக கைப்பேசித் தரவுகளைப் பயன்படுத்துவதே இதன் நோக்கமென அவ்வாணையம் கூறியது.

இந்தோனேசியா, பிரேசில் போன்ற பெரிய நாடுகளில் அடையாளங்கள் நீக்கப்பட்ட தொலைத்தொடர்பு தரவுகள், பயனர்களின் தனியுரிமையை சமரசம் செய்யாமல், தேசிய புள்ளிவிவரங்களை மேம்படுத்த பயன்படுத்தப்படுவதை MCMC சுட்டிக் காட்டியது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!