
சென்னை, ஜூன்-9 – தமிழகத்தின் வேலூரில் உலகின் மூன்றாவது மிக உயரமான முருகன் சிலை மிகவும் பிரமாண்டமாகக் கட்டப்பட்டுள்ளது.
92 அடி கொண்ட அச்சிலையை வடிவமைத்தது வேறு யாருமல்ல… நம் பத்து மலையில் 140 அடி உயரத்தில் உலகின் மிக உயரமான முருகன் சிலையை வடிவமைத்த சிற்பி தியாகராஜன் தான்.
இரண்டாண்டுகளுக்கும் மேல் சிலையை வடிவமைக்கும் பணிகள் நடைபெற்று, அண்மையில் கும்பாபிஷேகமும் கோலாகலமாக நடத்தப்பட்டது.
சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையின் அருகேயுள்ள குன்றின் மீது அமைக்கப்பட்டுள்ள இவ்வண்ணச் சிலை, பல கிலோ மீட்டர் தூரத்திலிருந்து பார்க்கும் அளவுக்கு கம்பீரமாய் காட்சியளிக்கிறது.
இதனால் வெறும் ஆன்மீகத் தலமாக இல்லாமல், வேலூரின் முக்கிய சுற்றுலா இடமாகவும் இது மாறியுள்ளது.
திருவாரூரைச் சேர்ந்த 59 வயது சிற்பி தியாகராஜன் இதற்கு முன் சேலத்தில் 111 அடி உயரத்தில் முத்து மலை முருகன் சிலையை வடிவமைத்திருந்தார்.
இப்போது உலகின் மூன்றாவது உயரமான முருகன் சிலையையும் வடிவமைக்க தமக்குக் கிடைத்த வாய்ப்பு பெரும் பாக்கியம் என அவர் வருணித்தார்.
முதலிரண்டு முருகன் சிலைகளை விட சற்று மாறுப்பட்ட நிலையில் இருக்க வேண்டுமென கோயில் நிர்வாகம் கேட்டுக் கொண்டதற்கிணங்க இந்த வேலூர் முருகன் சிலையை அவர் வடிவமைத்துள்ளார்.
3 உயரமான முருகன் சிலைகளை வடிவமைத்தும் இன்னும் முழு திருப்தி அடையவில்லை என்கிறார் தியாகராஜன்.
இன்னும் இது போன்ற நிறைய வாய்ப்புகள் வரும் என தாம் காத்திருப்பதாக, முன்பு 27 ஆண்டுகள் மலேசியாவில் சிலை வடிவமைப்பாளராக பணியாற்றியவரான அவர் புதியத் தலைமுறை தொலைக்காட்சியிடம் தெரிவித்தார்.