
புத்ராஜெயா, ஜூன்-23 – RM1,700-க்கும் கீழ் குறைந்தபட்ச ஊதியம் பெறும் தொழிலாளர்கள் உடனடியாக அது குறித்து ஆள்பலத் துறையிடம் புகார் அளிக்குமாறு மனிதவள அமைச்சான KESUMA அறிவுறுத்தியுள்ளது.
மலேசியாவில் தொழிலாளர்களின் நலன் மற்றும் உரிமைகளைப் பாதுகாக்க நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச ஊதிய விதிமுறைகளுக்கு இணங்க அனைத்து தரப்பினரும் கடமைப்பட்டுள்ளனர்.
எனவே, 2011 தேசிய ஊதிய ஆலோசனை மன்றச் சட்ட மீறல்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கத் தயங்க மாட்டோம் என KESUMA இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
சுற்றுலா பேருந்து ஓட்டுநர்கள் நிரந்தர அலவன்ஸ் தொகை இல்லாமல் மாதத்திற்கு வெறும் RM700 அடிப்படை சம்பளத்தை மட்டுமே பெறுவதாகவும், சிலருக்கு அடிப்படைச் சம்பளம் கூட வழங்கப்படுவதில்லை என்றும் இணைய ஏட்டொன்றில் வெளியான தகவல் குறித்து அமைச்சு அவ்வாறு கருத்துரைத்தது.
இதன் விளைவாக, ஓட்டுநர்கள் விடுமுறை நாட்களைத் தியாகம் செய்து கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் வேலை செய்யும் அளவுக்கு, பயண அலவன்ஸ் மற்றும் கூடுதல் நேரத்தை நம்பி இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
தற்போது நடைமுறையில் உள்ள குறைந்தபட்ச ஊதிய உத்தரவின் கீழ், அடிப்படை சம்பள அமைப்பு மூலமாகவோ அல்லது மொத்த மாத வருமானம் மூலமாகவோ ஊழியர்கள் மாதத்திற்கு RM1,700 குறைந்தபட்ச சம்பளத்தைப் பெறுவதை முதலாளிகள் உறுதி செய்ய கடமைப்பட்டுள்ளனர்.
“சேவை ஒப்பந்தத்தில் முதலாளி அடிப்படை சம்பளத்தை நிர்ணயித்தால், அடிப்படை சம்பள விகிதம் தற்போதைய குறைந்தபட்ச சம்பள விகிதத்தை விட குறைவாக இருக்கக்கூடாது” என அமைச்சு சுட்டிக் காட்டியது.
“அதுவே சேவை ஒப்பந்தத்தில் முதலாளி அடிப்படை சம்பளத்தை நிர்ணயிக்கவில்லை என்றால், செலுத்த வேண்டிய மாதாந்திர சம்பள விகிதம் தற்போதைய குறைந்தபட்ச சம்பள விகிதத்தை விடக் குறைவாக இல்லை என்பதையும், பிற அலவன்ஸ் தொகைகள் சேர்க்கப்படவில்லை என்பதையும் முதலாளிகள் உறுதி செய்ய வேண்டும்”
பகுதிநேர ஊழியர்களுக்கும் இது பொருந்தும்.
இந்நிலையில், குறைந்தபட்ச சம்பள ஊதிய உத்தரவை மீறும் புகார்கள் அல்லது சம்பளக் குறைப்பு மீறல்களுக்கு எதிராக, ஆள்பலத் துறை கண்காணிப்பு மற்றும் அமலாக்க நடவடிக்கைகளை அதிகரிக்கும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.