Latestமலேசியா

கல்வியில் வெற்றிபெற்ற ஒவ்வொரு மாணவரின் மனதிலும் டாக்டர் தம்பிராஜா நிலைத்திருப்பார் – ஸாஹிட் & புனிதன் இரங்கல்

கோலாலம்பூர், ஜூன் 24 – கல்வியில் வெற்றி பெற்ற ஒவ்வொரு மாணவரின் மனதிலும் ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் தோற்றுநர் பேராசிரியர் டான்ஸ்ரீ டாக்டர் தம்பிராஜா நிலைத்திருப்பார் என தனது இரங்கல் செய்தியில் துணைப்பிரதமர் டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி தெரிவித்தார். மலாயா பல்கலைக்கழகத்தில் தாம் உயர்க்கல்வியை மேற்கொண்டபோது ஒரு கல்வியாளராக, விரிவுரையாளராக மற்றும் சமூக உணர்வுமிக்க ஒரு நல்ல மனிதராக டாக்டர் தம்பிராஜாவை அறிந்துள்ளதாகவும் சமூகத்தில் உருமாற்றத்திற்கு கல்வியே அடிப்படை என்பதை அவர் எப்போதும் வலியுறுத்தி வந்ததை மறக்க முடியாது . அவரது மறைவு நாட்டிற்கும் மலேசிய இந்தியர்களுக்கும் குறிப்பாக கல்வியில் வெற்றி பெறுவதற்கு தூண்டுகோலாக இருந்துவந்தவர்களுக்கும் பெரும் இழப்பு என அகமட் ஸாஹிட் வருணித்தார்.

நாட்டில் மேலும் ஒரு கல்வியாளர் மறைந்தார் என நேற்று காலையில் அறிந்து தாம் கவலையும் அதிர்சியும் அடைந்ததாகவும் அவரது குடும்பத்திற்கு மட்டுமின்றி ஸ்ரீ முருகன் குடும்பத்திற்கும் தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்ளும் அதே வேளையில் அவர் ஆற்றிய சேவையும் தியாகமும் நாம் அனைவரின் மனங்களிலும் என்றும் நிலைத்திருக்கும் என பேராசிரியர் டான்ஸ்ரீ தம்பிராஜாவின் இல்லத்திற்கு சென்று அவரது நல்லுடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் வெளியிட்ட இரங்கல் செய்தியில் ஸாஹிட் தெரிவித்தார்.

இதனிடையே இந்திய சமூகம் கல்வியில் சாதனை படைக்க வேண்டும் என தொலைநோக்கு சிந்தனையோடு தனது கடைசி மூச்சுவரை இந்திய சமூகத்தின் முன்னேற்றம் கல்வியில்தான் இருக்கிறது என்பதற்காக சளைக்காமல் பாடுபட்ட மனிதராக டாக்டர் எம். தம்பிராஜா விளங்கினார் என மலேசிய இந்தியர் மக்கள் கட்சியான MIPP யின் தலைவர் எஸ்.பி புனிதன் தெரிவித்தார். ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தை தொடங்கி அதனை வெற்றிகரமான கல்வி நிலையமாக உருவாக்குவதற்கு சுயநலமின்றி அர்ப்பணிப்பு உணர்வோடு பேராசிரியர் டாக்டர் தம்பிராஜா பணியாற்றியுள்ளார்.

நாடு முழுவதிலும் ஆயிரக்கணக்கான மாணவர்களின் வாழ்க்கையில் உருமாற்றம் ஏற்படுவதற்கு கல்வியை அவர் ஒரு தூண்டுகோலாக பயன்படுத்தினார். அவரது மறைவினால் துயரில் மூழ்கியுள்ள அவரது குடும்பத்தினருக்கும் , ஸ்ரீ முருகன் நிலையத்தின் உறுப்பினர்களுக்கும் MIPP கட்சியின் சார்பில் தனது ஆழ்ந்த அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு அவரது சேவையை ஸ்ரீ முருகன் நிலையம் தொடர வேண்டும் என் புனிதன் வெளியிட்ட இரங்கல் செய்தியில் கேட்டுக்கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!