Latestமலேசியா

அமைச்சரவைத் தலையீட்டால் A- சிக்கல் விலகியது; SPM-மில் 10 பாடங்களிலும் A பெற்றவர்களுக்கு மெட்ரிகுலேஷனில் இடம்

புத்ராஜெயா, ஜூன்-26 – 2024 SPM தேர்வில் 10 பாடங்களிலும் A நிலையில் தேர்ச்சிப் பெற்ற அனைத்து மாணவர்களுக்கும், இனம் உள்ளிட்ட எந்தவொரு பின்புலமும் பார்க்காமல் மெட்ரிகுலேஷன் கல்லூரிகளில் இடம் கிடைக்கும்.

அவர்களில் A- தேர்ச்சிப் பெற்ற மாணவர்களுக்கும் இடம் உறுதியென, நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவுச் செய்யப்பட்டதாக, கல்வி அமைச்சு அறிக்கையொன்றில் தெரிவித்தது.

கடந்தாண்டு பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் செய்த அறிவிப்புக்கு ஏற்ப இக்கொள்கை அமைகிறது.

10A-க்களை வைத்திருந்தும், அவற்றில் ஒன்றிலோ அல்லது அதற்கு மேற்பட்ட பாடங்களிலோ A- தேர்ச்சி இருந்ததால் இடம் கிடைக்காத எஞ்சிய அனைத்து மாணவர்களுக்கும், மேற்கல்வித் தொடர வாய்ப்பு வழங்கப்படுவதை இது உறுதிச் செய்யும்.

அதே சமயம், மெட்ரிகுலேஷன் கல்லூரிகளுக்கான பூமிபுத்ரா மாணவர்களின் இட ஒதுக்கீட்டுக்கு இதனால் எந்தப் பாதிப்பும் இல்லை; அவர்களுக்கு நடப்பிலுள்ள கோட்டா விகிதம் தொடருமென அமைச்சு கூறியது.

மாணவர்கள் தான் நாட்டின் வருங்கால சொத்துக்கள் என்பதால், அவர்களுக்கான கல்வி வாய்ப்புகளை மேம்படுத்த மடானி அரசாங்கம் தொடர்ந்து நடவடிக்கைகளை எடுத்து வருமென்றும் அமைச்சு உறுதியளித்தது.

SPM தேர்வில் அனைத்துப் பாடங்களிலும் A+ அல்லது A தேர்ச்சிப் பெற்ற மாணவர்களுக்கே மெட்ரிகுலேஷன் கல்லூரிகளில் நேரடி வாய்ப்புக் கிடைக்கும்; இருந்தாலும் A- தேர்ச்சிப் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம், அதுவும் பரிசீலிக்கப்படுமென கல்வி அமைச்சர் ஃபாட்லீனா சிடேக் நேற்று திட்டவட்டமாகக் கூறியிருந்தார்.

‘சாமியே வரம் கொடுத்தாலும் பூசாரி விட மாட்டார் போல’ என்ற சொல்லாடலுக்கு ஏற்ப, பிரதமரே சரி சொன்ன பிறகும் அமைச்சர் குறுக்கே நிற்கிறாரே என, ஃபாட்லீனா பெரும் கண்டனங்களுக்கு ஆளானார்.

இந்நிலையில், A- சிக்கலைத் தீர்த்து வைத்து மாணவர்கள் அவர்தம் பெற்றோர்களின் கவலைகளை அமைச்சரவை போக்கியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!