
கோத்தா கினாபாலு, ஜூலை-17-காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட 11 வயது சிறுமி நுர்ஜில்யா அப்துல்லாவின் (Nurjilya Abdullah) உடல் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, சபா போலீஸ் கொலை வழக்கு ஒன்றை பதிவுச் செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளது.
கோத்தா கினாபாலு, செப்பாங்காரில் பாதியிலேயே கட்டப்பட்ட வீட்டின் அருகிலுள்ள புதர்களில், பொது மக்களால் இந்த உடல் கண்டெடுக்கப்பட்டது.
திங்கட்கிழமை சிறுமி காணாமல் போனபோது அணிந்திருந்த ஆடைகளை வைத்து, அவரது தாயார் உடலை அடையாளம் காட்டினார்.
சிறுமி தலையில் பலமாகத் தாக்கப்பட்டதால் உயிரிழந்ததாக தடயவியல் நிபுணர்கள் கருதுவதாக, கோத்தா கினாபாலு போலீஸ் கூறியது.
இந்த விசாரணைக்கு உதவியாக 39 மற்றும் 42 வயதுடைய இருவர் கைதுச் செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் இன்று நீதிமன்றக் காவலில் வைக்கப்படவுள்ளனர்.
இச்சம்பவத்திற்கான நோக்கம் குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.



