
சிரம்பான், ஜூன்-28 – அரசாங்க மானியங்களைப் பள்ளிகள் முறையாகவும் விவேகமாகவும் பயன்படுத்த வேண்டும்.
தவறினால் விசாரணைக்கு ஆளாக வேண்டியதோடு, வருங்காலத்தில் மானியங்களை அவர்கள் மறக்க வேண்டியதுதான்.
போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் அவ்வாறு நினைவுறுத்தியுள்ளார்.
பள்ளிகளுக்கு வழங்கப்படும் மானியங்களில் ஒவ்வொரு காசும் எப்படி செலவிடப்படுகிறது என்பதை, பிரதமர் துறை அமைச்சு அணுக்கமாகக் கண்காணிக்கிறது; யாரும் அதில் தப்ப முடியாது என்றார் அவர்.
நெகிரி செம்பிலான், சிரம்பானில் 6 தமிழ்ப் பள்ளிகளுக்கு மானியங்களை ஒப்படைத்த நிகழ்வில், அத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் பேசினார்.
லோபாக் தமிழ்ப் பள்ளி, நீலாய் தமிழ்ப் பள்ளி, துன் சம்பந்தன் தமிழ்ப் பள்ளி, கெய்ரோ தோட்டத் தமிழ்ப் பள்ளி, லெங்கேங் தோட்டத் தமிழ்ப் பள்ளி, நீலாய் இம்பியான் தமிழ்ப் பள்ளி ஆகியவையே அந்த 6 தமிழ்ப் பள்ளிகளாகும்.
லோபாக் தமிழ்ப் பள்ளியில் நடைபெற்ற அந்நிகழ்வில் மொத்தமாக 362,000 ரிங்கிட் நிதி பகிர்ந்தளிக்கப்பட்டது.
மாநில ஆட்சிக் குழு உறுப்பினரும் DAP தேசிய உதவித் தலைவருமான அருள்குமார் ஜம்புநாதன், லோபாக் சட்டமன்ற உறுப்பினர்
Chews Seh Yong உள்ளிட்டோர் அதில் கலந்துகொண்டனர்.
நாடாளுமன்ற உறுப்பினரின் நிதி ஒதுக்கீட்டோடு, 3 தமிழ்ப் பள்ளிகளுக்கு மாநில அரசின் நிதி ஒதுக்கீட்டுக்கான காசோலைகளும் ஒப்படைக்கப்பட்டன.
லோபாக் தமிழ்ப் பள்ளி, நீலாய் தமிழ்ப் பள்ளி, கைரோ தோட்டத் தமிழ்ப் பள்ளி ஆகியவைவே அம்மூன்று பள்ளிகளாகும்.
இவ்வேளையில் பள்ளிகளுக்கான மானியங்கள் குறித்தும் முக்கியத் தேவைகள் குறித்தும் அருள்குமார் வணக்கம் மலேசியாவிடம் விவரித்தார்.
மானியங்களுக்கான காசோலைகளைப் பெற்றுக் கொண்ட பள்ளி நிர்வாகத்தினரும் பெற்றோர் ஆசிரியர் சங்க பிரதிநிதிகளும் தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டனர்.
கிடைக்கப்பெற்ற நிதி பள்ளிகளின் வசதி கட்டமைப்பு மேம்பாட்டுக்கும் மாணவர்களின் கற்றல் உபகரணங்களுக்காகவும் நல்ல வகையில் பயன்படுத்தப்படும் என நம்புவோம்.