
இஸ்லாமாபாத், ஜூன்-29 – ஆப்கானிஸ்தானை எல்லையாகக் கொண்ட வட மேற்கு பாகிஸ்தானில் ஓர் ஆடவன் நடத்திய தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில், 13 இராணுவ வீரர்கள் உடல் சிதறி மாண்டனர்.
வெடிப்பொருட்கள் நிரம்பிய வாகனத்தை இராணுவப் படையின் வாகன அணிவகுப்பின் மீது அவன் மோதியதாக, இஸ்லாமாபாத் கூறியது.
அவ்வெடிப்பினால் அருகிலுள்ள வீடுகளின் கூரைகள் சரிந்து விழுந்ததாகவும், கண்ணாடிகள் குலுங்கியதாகவும் பொது மக்கள் கூறினர்.
தொலை தூரத்திலிருந்து வானில் கரும்புகை எழும்பியதையும் காண முடிந்தது.
இதுவொரு மனிதாபிமானமற்ற செயல் என சாடிய பாகிஸ்தானிய இராணுவம் அப்பாவி பொது மக்கள் மூவர் படுகாயமடைந்ததாகவும் கூறிக் கொண்டது.
ஒரு பெண், இரு சிறுவர்கள் ஆகியோரே அவர்களாவர்.
இதையடுத்து அப்பகுதியில் பதில் தாக்குதல் நடத்திய இராணுவம், 14 கிளர்ச்சிக்காரர்களை கொன்றது.
இதுவரை அத்தாக்குதலுக்கு யாரும் பொறுப்பேற்கவில்லை.
என்றாலும், தங்களது பரம வைரியான இந்தியா ஆதரிக்கும் கிளர்ச்சித் தரப்பே இத்தாக்குதலுக்குக் காரணமென, பாகிஸ்தான் இராணுவம் குற்றம் சாட்டியது.
எனினும் இந்தியா அக்குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்துள்ளது.