
குவாலா பெராங், ஜூன்-30 – வங்காளதேசத்தை சேர்ந்த கிளர்ச்சிப் படையில் எந்த மலேசியரும் சேர்க்கப்படவில்லை என உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நாசூத்தியோன் இஸ்மாயில் உறுதிப் படுத்தியுள்ளார்.
IS தீவிரவாதக் கோட்பாட்டை பின்பற்றும் இயக்கத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 36 வங்காளதேச ஆண்கள் அண்மையில் கைதுச் செய்யப்பட்டது குறித்து அவர் கருத்துரைத்தார்.
கைதானவர்களில் சிலர் சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டு, சிலர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மேலும் சிலர் மீது விசாரணைத் தொடர்கிறது.
இந்த நடவடிக்கை நீண்ட நாள் உளவுத்துறை கண்காணிப்பு மூலம் மேற்கொள்ளப்பட்டது.
இது ஏப்ரல் மாதமே நடந்தது, ஆனால் சில நாட்களுக்கு முன்னர்தான் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது என்றார் அவர்.
இந்தக் குழுவின் நோக்கம் தங்களது சொந்த நாட்டான வங்காளதேசத்தில் அரசாங்கத்தை மாற்றுவதே என தெரியவந்துள்ளது.
ஒருவேளை மலேசியாவை ஒரு பயங்கரவாதத் தளமாக மாற்ற முயற்சி இருந்தால், அதனைத் தடுக்க பாதுகாப்புப் படைகள் முழுத் தயார் நிலையில் உள்ளதாகவும் சைஃபுடின் கூறினார்.
நாம் அதை முறையாகக் கண்காணிக்கவில்லை என்றால், அது நாட்டின் பாதுகாப்புக்கு பெரிய அச்சுறுத்தலாக மாறும் என அவர் எச்சரித்தார்.